6 பாடங்களிலும் தோல்வி.. கேக் வெட்டி ஊட்டி விட்ட பெற்றோர்கள்.. கர்நாடகாவில் நெகிழ்ச்சி!
Karnataka 10th Grader Fails: கர்நாடக மாநிலம் பாகல்கோட்டைச் சேர்ந்த அபிஷேக், 10ம் வகுப்பு தேர்வில் 6 பாடங்களில் தோல்வியடைந்தார். இருப்பினும், அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அவரை ஊக்கப்படுத்தும் விதமாக கேக் கொண்டாடினர். அபிஷேக்கின் நினைவாற்றல் குறைபாடு தோல்விக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு பெற்றோரின் அன்பையும், ஆதரவையும் எடுத்துக்காட்டுகிறது.

கர்நாடகா, மே 4: இந்தியா முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களிலும் பொதுத்தேர்வு முடிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இந்தநிலையில், கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டின் நவநகரில், எஸ்எஸ்எல்சி 6 பாடங்களில் தோல்வியடைந்த தங்கள் மகனுக்கு கேக் ஊட்டி பெற்றோர் ஊக்கப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. தோல்வியடைந்த மகனை ஊக்குவிப்பதற்காக தந்தை, தாய், சகோதரன், சகோதரி, பாட்டி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு கேக் ஊட்டி ஊட்டினர். அபிஷேக் யல்லப்பா சோழச்சகுடா எஸ்எஸ்எல்சி தேர்வில் 625க்கு 200 மதிப்பெண்கள் (32%) பெற்று 6 பாடங்களில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மனம் உடைந்து போயிருந்த அபிஷேக்கிற்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, அவரது பெற்றோர் அவருக்கு கேக் ஊட்டி, முத்தங்களை அளித்தனர்.
ஊக்கப்படுத்திய பெற்றோர்கள்:
NDTV வெளியிட்ட செய்திகளின்படி, கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டில் உள்ள பசவேஷ்வர் ஆங்கில வழிப் பள்ளியின் மாணவரான அபிஷேக் யல்லப்பா சோழச்சகுடா தான் எழுதிய 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு வெறும் 200 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தார். அதிலும், தான் எழுதிய 6 பாடங்களிலும் தோல்வியை சந்தித்தார். இதன் காரணமாக, அபிஷேக் யல்லப்பா சோழச்சகுடாவின் நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் அவரை கடுமையாக கேலி செய்ய தொடங்கினர்.
இருப்பினும், அபிஷேக்கின் பெற்றோர்கள் அவரை ஒருபோதும் திட்டவும் இல்லை, அடிக்கவும் இல்லை. அதற்கு பதிலாக அவர் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேறு பாதையை முயற்சி செய்தனர். அபிஷேக் யல்லப்பா சோழச்சகுடா 6 பாடங்களில் 6லிலும் தோல்வியடைந்தாலும் அவரது பெற்றோர்கள் அக்கம்பக்கத்தினரை அழைத்து, அந்த தருணத்தை ஒரு கேக் வெட்டி கொண்டாடினர். இந்த கேக் வெட்டும் நிகழ்ச்சியில், அபிஷேக்கின் பெற்றோர்கள், நண்பர்கள் உடன் இருந்தனர். இதுகுறித்து அவரது பெற்றோர்கள் தெரிவிக்கையில், “ அபிஷேக் 10 வகுப்பு தேர்வில் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், அவர் ஒருபோது வாழ்க்கையில் தோல்வியடையவில்லை. அபிஷேக் மீண்டும் முயற்சி செய்து, அடுத்த முறை வெற்றிபெற முடியும்” என்று தெரிவித்தனர்.
பெற்றோர்கள் கொடுத்த ஆதரவால் மிகவும் நெகிழ்ச்சியடைந்த அபிஷேக் பேசியதாவது, “ நான் தேர்வில் தோல்வியடைந்தாலும், என் குடும்பத்தினர் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். நான் மீண்டும் தேர்வெழுதி, தேர்ச்சி பெற்று, வாழ்க்கையில் வெற்றி பெறுவேன்” என்று தெரிவித்தார்.
தேர்வில் தோல்வியுற்ற காரணம் என்ன..?
அபிஷேக் யல்லப்பா சோழச்சகுடா 15 மாதக் குழந்தையாக இருந்தபோது அவரது இரண்டு கால்களும் எரிந்ததால் அவர் தனது நினைவாற்றலை இழந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக, அபிஷேக் நினைவில் வைத்து பதில் எழுத முடியவில்லை என்றும், இதுவே, அபிஷேக் தோல்வியடைந்ததற்கு இதுவே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.