இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிக்கிறோம்.. இஸ்ரோ விளக்கம்!
ISRO monitoring India's security through 10 Satellites | இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இருப்பினும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவின் பாதுகாப்பை செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, மே 12 : இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO – Indian Space Research Organization) தெரிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாக உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ கூறியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் பாதுகாப்பு கண்காணிப்புகள் குறித்து இஸ்ரோ கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதல் மூலம் இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே வெடித்த மோதல்
ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தம் 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
அந்த வகையில் ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) மூலம் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்திய ராணுவம், இந்தியாவை நோக்கி வந்த ஏவுகணைகளை வானிலே வைத்து சிதைத்தது. இவ்வாறு இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில், பெரும் போராக மாறும் அச்சம் நிலவியது.
ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே மே 10, 2025 அன்று மாலை போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், எந்த வித தாக்குதல்களும் இல்லாமல் இரு நாடுகளிலும் அமைதி நிலவுகிறது. ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட அன்றைய தினமே பாகிஸ்தான் இந்தியாவின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. அதனை தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக அறிவித்தது. அதுமட்டுமன்றி, போர் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே அமிர்தசரஸில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியாவின் பாதுகாப்பு – இஸ்ரோ விளக்கம்
இந்த நிலையில் இது குறித்து கூறியுள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையம், இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிப்பதாக கூறியுள்ளது. இந்தியாவின் 7,000 கிலோ மீட்டர் நீள கடற்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியுள்ளது. நாட்டின் வடக்கு பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளது. ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் வசதியில்லாமல் இவற்றை சாத்தியப்படுத்த முடியாது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.