எரிபொருள் தட்டுப்பாடு.. பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை..
Middle East Conflict: சரக்குக் கப்பல்களின் காப்பீட்டுத் தொகை மற்றும் பயணச் செலவு அதிகரிப்பதால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. பெட்ரோல், டீசல் விலையைத் தற்போதைக்கு உயர்த்தாமல் இருப்பதற்கான நிதிச் சுமைகளை அரசு ஏற்கும் விதமாகச் சில பொருளாதாரத் திட்டங்கள் குறித்தும் நிதியமைச்சருடன் பிரதமர் விவாதித்தார்.

பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிக்க: மிக நீண்ட காலம் அரசாங்கத் தலைவர்.. புது சாதனை படைத்த பிரதமர் மோடி
கச்சா எண்ணெய் இருப்பு:
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்திற்கும் மேலாக இறக்குமதி செய்கிறது. பாரசீக வளைகுடா பகுதியில் போர் பதற்றம் நீடிப்பதால், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படலாம். இதை எதிர்கொள்ள நாட்டின் மூலோபாய எண்ணெய் இருப்பு (Strategic Petroleum Reserves) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் மாற்று நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயைப் பெறுவது குறித்துப் பிரதமர் ஆலோசித்தார்.
உர விநியோகம், விவசாயப் பாதுகாப்பு:
இந்தியா ஈரானிடம் இருந்து கணிசமான அளவு உரங்களை இறக்குமதி செய்கிறது. குறிப்பாக, குறுவை சாகுபடி காலம் நெருங்கி வருவதால், விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. “உர விநியோகத்தில் எவ்விதத் தடையுமின்றி விவசாயிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்” என்று அதிகாரிகளுக்குப் பிரதமர் அறிவுறுத்தினார்.
மின்சார உற்பத்தி:
கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. எரிவாயு மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்குப் பிரதமர் உத்தரவிட்டார். போரினால் இயற்கை எரிவாயு விலை உயர்ந்தால் மின் உற்பத்தி பாதிக்கப்படலாம். இதைத் தவிர்க்க நிலக்கரி மூலம் இயங்கும் மின் நிலையங்கள் முழுத் திறனுடன் இயங்குவதை உறுதி செய்தல். நீர்மின் உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை அதிகப்படுத்துதல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.
பணவீக்கம், விலைவாசி உயர்வு:
சரக்குக் கப்பல்களின் காப்பீட்டுத் தொகை மற்றும் பயணச் செலவு அதிகரிப்பதால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. பெட்ரோல், டீசல் விலையைத் தற்போதைக்கு உயர்த்தாமல் இருப்பதற்கான நிதிச் சுமைகளை அரசு ஏற்கும் விதமாகச் சில பொருளாதாரத் திட்டங்கள் குறித்தும் நிதியமைச்சருடன் பிரதமர் விவாதித்தார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள வர்த்தகப் பாதைகளின் பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியக் கடற்படை அரபிக்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது குறித்துப் பாதுகாப்புத் துறை அமைச்சருடன் பிரதமர் விரிவாகப் பேசினார்.
இதையும் படிக்க: இந்தியாவின் நிலைப்பாடு? ஈரான் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி
எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது:
சர்வதேசப் போர்ச் சூழலால் இந்திய மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தேவையெனில் கூடுதல் பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்தக் கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளுடனான வர்த்தகம் பாதிக்கப்படும் பட்சத்தில், இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதே நோக்கமாகும். நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், தேவையான நேரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.