எல்.பி.ஜி பற்றாக்குறை: மண்ணெண்ணெய் விதிகளில் தளர்வு.. 60 நாட்களுக்கு அவசர விநியோகம் தொடக்கம்
மண்ணெண்ணெய் விநியோகம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் குறிப்பிடும் நிலையங்களில் மட்டுமே வழங்கப்படும். இது வீட்டு பயன்பாடுகளான சமையல் மற்றும் விளக்கிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பெட்ரோலிய மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு வழங்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தொடர்ந்து பின்பற்றப்படும்.

கோப்பு புகைப்படம்
மார்ச் 30, 2026: நாட்டில் எல்.பி.ஜி (LPG) பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், மண்ணெண்ணெய் தொடர்பான விதிகளை தளர்த்த மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதற்கான அரசிதழ் அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. வீடுகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகத்தை விரைவுபடுத்தும் நோக்கில், பெட்ரோலிய பாதுகாப்பு மற்றும் உரிமம் வழங்கும் விதிகளில் மத்திய அரசு தளர்வு வழங்கியுள்ளது. ஈரான் மோதல் காரணமாக உலகளாவிய எரிசக்தி வழங்கலில் இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் மூலம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வீடுகளுக்கு சமையல் மற்றும் விளக்குப் பயன்பாட்டிற்காக அவசர அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்க முடியும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
சூப்பீரியர் கெரோசின் ஆயில்:
பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், பொது விநியோக அமைப்பு (PDS) மூலம் ‘சூப்பீரியர் கெரோசின் ஆயில்’ (SKO) எனப்படும் மண்ணெண்ணெயை 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சமையல் மற்றும் விளக்குப் பயன்பாட்டிற்காக தற்காலிகமாக ஒதுக்க அனுமதி வழங்கியுள்ளது. இதில் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்டவை அடங்கும்.
மேலும் படிக்க: மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு
முக்கிய அம்சங்கள்:
- தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் பங்குகள் மண்ணெண்ணெய் சேமித்து விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.
- இவை அரசு சார்ந்த எண்ணெய் விற்பனை நிறுவனங்களால் இயக்கப்படும் நிலையங்கள் ஆகும்.
- ஒவ்வொரு நிலையமும் அதிகபட்சமாக 5,000 லிட்டர் வரை மண்ணெண்ணெய் சேமிக்க அனுமதி வழங்கப்படும்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகபட்சம் இரண்டு நிலையங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
- மண்ணெண்ணெய் சேமிப்பு மற்றும் போக்குவரத்திற்காக செயல்படும் விற்பனையாளர்கள் மற்றும் வாகனங்களுக்கு, 2002 ஆம் ஆண்டின் பெட்ரோலிய விதிகளில் இருந்து சில உரிமம் தொடர்பான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
- சேமிப்பு, போக்குவரத்து மற்றும் இறுதி நிலை விநியோகத்தை வேகப்படுத்துவது இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
இந்த விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன மற்றும் 60 நாட்கள் அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும்.
மண்ணெண்ணெய் விநியோகம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் குறிப்பிடும் நிலையங்களில் மட்டுமே வழங்கப்படும். இது வீட்டு பயன்பாடுகளான சமையல் மற்றும் விளக்கிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பெட்ரோலிய மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு வழங்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தொடர்ந்து பின்பற்றப்படும்.
இந்த நடவடிக்கையின் மூலம், முன்பு நிறுத்தப்பட்டிருந்த சில பகுதிகளில், பொது விநியோக அமைப்பின் கீழ் மண்ணெண்ணெய் விநியோகம் தற்காலிகமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள எரிபொருள் விற்பனை வலையமைப்பை பயன்படுத்தி விநியோகம் விரைவாக மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.