Niti Aayog : பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடும் நிதி ஆயோக் கூட்டம்.. முக்கிய அம்சங்கள் என்ன?

10th Niti Aayog Meeting Under the Leadership of PM Modi | 2015 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 2025-ல் 10வது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (மே 24, 2025) நடைபெற உள்ளது.

Niti Aayog : பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடும் நிதி ஆயோக் கூட்டம்.. முக்கிய அம்சங்கள் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி

Updated On: 

24 May 2025 09:14 AM

டெல்லி, மே 24 : டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் (Niti Aayog Meeting) நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளார். நித்தியாயக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், தமிழகத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும் என கூட்டத்தில் பேச உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம்

இந்தியாவில் 1950 ஆம் ஆண்டு மத்திய திட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டது. நாட்டின் ஐந்து ஆண்டு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் இந்த குழு வடிவமைக்கப்பட்டது. அதன்படி, நாட்டின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்க ஆண்டுதோறும் கூடும் இந்த குழுவில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும். இந்த விவாதங்களின் அடிப்படையில், நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இந்த மத்திய திட்ட குழு தான் 2015 ஆம் ஆண்டு நிதி ஆயோக் அமைப்பாக மாற்றம் செய்யப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ள நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அவரது தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் இன்று (மே 24, 2025) நடைபெறுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடும் நிதி ஆயோக கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 10வது நிதி ஆயோக் கூட்டம் இன்று (மே 24, 2025) டெல்லியில் நடைபெற உள்ளது. சரியாக காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக, 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் இலக்கில் மாநிலங்களின் பங்கு குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து நடத்தப்படும் முதல் நிதி ஆயோக் கூட்டமாக இது அமைந்துள்ள நிலையில், மிகுந்த கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.