இளைஞர்களையும் விடாத உடல் பருமன்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

Rising Obesity and Hidden Health Risks: தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உடல் பருமன், ரத்த சோகை, நீரிழிவு போன்ற தொற்றா நோய்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன என்பது சமீபத்திய அறிக்கையில் வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் அதிகளவில் உடல் பருமன் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காணப்படுவது பெரும் சுகாதார சவாலாக மாறியுள்ளது.

இளைஞர்களையும் விடாத உடல் பருமன்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

இளைஞர்களையும் விடாத உடல் பருமன்

Published: 

09 Apr 2026 14:24 PM

 IST

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உடல் பருமன், ரத்த சோகை மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் ஒரே நேரத்தில் அதிகரித்து வருவதாக அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள ‘Health of the Nation 2026’ அறிக்கை எச்சரிக்கிறது. உலக சுகாதார தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, 2025-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 30 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பு ஆரோக்கிய பரிசோதனைகளை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக, சென்னையில் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 77% பேர் உடல் பருமன் கொண்டவர்களாகவும், 38% பேர் ரத்த சோகையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் 26% பேருக்கு உயர் ரத்த அழுத்தமும், 25% பேருக்கு நீரிழிவு நோயும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக நகரங்களில் அதிகரிக்கும் நோய் பாதிப்புகள்

தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களான மதுரை மற்றும் திருச்சியிலும் ஆரோக்கியக் குறைபாடுகள் கவலைக்கிடமாக உள்ளன. ஆய்வு செய்யப்பட்ட நகரங்களிலேயே மதுரையில் தான் அதிகபட்சமாக 36% நீரிழிவு நோய் பாதிப்பு பதிவாகியுள்ளது; அங்கு 83% பேர் உடல் பருமனுடனும், 26% பேர் உயர் ரத்த அழுத்தத்துடனும் உள்ளனர். திருச்சி மாநகரம் 84% உடல் பருமனுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இங்கு 34% நீரிழிவு மற்றும் 32% ரத்த சோகை பாதிப்புகள் உள்ளன. மற்ற இந்திய நகரங்களுடன் ஒப்பிடுகையில், ஹைதராபாத்தில் 81% உடல் பருமனும், டெல்லி-NCR பகுதியில் 81% பருமனும் பதிவாகியுள்ளது. மும்பையில் 82% உடல் பருமன் இருந்தாலும், நீரிழிவு பாதிப்பு 16% ஆகக் குறைவாக உள்ளது. பெங்களூரு ஒப்பீட்டளவில் குறைந்த பாதிப்புகளைக் கொண்டுள்ளது.

இளைஞர்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்

தற்போது தொற்றா நோய்களின் (NCDs) அபாயம் முதியோர்களைத் தாண்டி இளைஞர்களிடமும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள் இத்தகைய நோய்களின் பிடியில் சிக்க வாய்ப்புள்ளதாக அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, வேலைக்குச் செல்லும் மக்களில் பாதி பேருக்கு நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை (Pre-diabetes) அல்லது நீரிழிவு பாதிப்பு உள்ளது. 17 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு ஏதோ ஒரு மறைமுக ஆரோக்கிய சிக்கல் இருப்பது தெரியவந்தது. இது குறித்து பேசிய அப்போலோ குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, “நாட்டின் உண்மையான வலிமை மக்களின் ஆரோக்கியத்தில் தான் உள்ளது; அது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட துல்லியமான பராமரிப்பாக இருக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

அறிகுறிகளற்ற பாதிப்புகளும் கண்டறியப்படாத நோய்களும்

பரிசோதனை செய்யப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்குக் கொலஸ்ட்ரால் அளவுகள் சீரற்று இருந்தன. சுமார் 70% பேருக்கு வைட்டமின் D குறைபாடும், 50% பேருக்கு வைட்டமின் B12 குறைபாடும் உள்ளது. அதிர்ச்சிகரமான தகவலாக, கல்லீரல் பாதிப்பு (Fatty Liver) உள்ளவர்களில் 74% பேருக்கு சாதாரண ரத்தப் பரிசோதனையில் என்சைம்கள் இயல்பாகவே இருந்தன. அதேபோல், எவ்வித இதய அறிகுறியும் இல்லாத 45% பேருக்கு இதயத் தமனிகளில் அடைப்புக்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, வழக்கமான பரிசோதனைகளைத் தாண்டி துல்லியமான ஸ்கிரீனிங் அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெண்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்நாள் நீட்டிப்பு

இந்தியப் பெண்களிடையே ரத்த சோகை மற்றும் வயது அதிகரிக்கும் போது ஏற்படும் வயிற்றுப் பகுதி உடல் பருமன் (Abdominal Obesity) பெரும் சுமையாகத் தொடர்கிறது. இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் கண்டறியப்படும் சராசரி வயது 51 ஆகக் குறைந்துள்ளதால், முறையான ஆரம்பகாலப் பரிசோதனைகள் அவசியம் என்று டாக்டர் சங்கீதா ரெட்டி மற்றும் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி ஆகியோர் சுட்டிக்காட்டினர். முறையான மருத்துவத் தொடர் கண்காணிப்பு (Follow-up) மேற்கொள்பவர்களிடம் உயர் ரத்த அழுத்தம் 56% வரையிலும், நீரிழிவு 34% வரையிலும் மேம்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நோய் வந்த பின் சிகிச்சை பெறுவதை விட, வருமுன் காக்கும் முறைக்கு மாற வேண்டியது கட்டாயமாகும்.

Also Read: பதற்றத்தை குறைக்கும் ஜப்பானிய ‘ஷின்ரின்-யோகு’ ரகசியம்

வயிற்றுப் பகுதி உடல் பருமன்: சென்னை உள்ளிட்ட நகரங்கள் ஹாட்ஸ்பாட்களாக மாற்றம்

டாடா டிரஸ்ட்ஸ் அமைப்பால் நிறுவப்பட்ட ‘Health Systems Transformation Platform’ நடத்திய ஆய்வில், சென்னை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் வயிற்றுப் பகுதி உடல் பருமனில் (Abdominal Obesity) முதலிடம் வகிக்கின்றன. நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது, வாகனங்களைச் சார்ந்திருப்பது மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் எளிதான புழக்கம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்தியாவின் 707 மாவட்டங்களில் 7 லட்சம் மக்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, 15-49 வயதுடைய பெண்களில் 56.6% பேரும், 15-54 வயதுடைய ஆண்களில் 48.9% பேரும் வயிற்றுப் பகுதி பருமனுடன் உள்ளனர். இது பி.எம்.ஐ (BMI) அளவீட்டை விட ஆபத்தானது, ஏனெனில் இது இதய நோய்களுடன் நேரடியாகத் தொடர்புடையது.

 

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?