பாமக சாதி கட்சியா? – சினிமா நிகழ்ச்சியில் டென்ஷனான தங்கர்பச்சான்!
தன்னுடைய மகன் நடிக்கும் "பேரன்பும் பெருங்கோபமும்" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், சாதி அரசியல் குறித்த கேள்வியால் இயக்குநர் தங்கர் பச்சானின் டென்ஷன் ஆனார். சாதிக்கு எதிரான படத்தில் பாமகவினர் சார்பில் போட்டியிட்டவரின் மகன் நடித்தது குறித்த கேள்விக்கு, தங்கர் பச்சான் கடுமையாக பதிலளித்தார். மேலும் பாமகவை சாதி கட்சி என குறிப்பிடுவதை விமர்சித்தார்.

தங்கர் பச்சான் (இடது)
தமிழ்நாட்டில் சாதி பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்தும் ஒரு கட்சியைக் காட்டுங்கள் என செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் தங்கர் பச்சான் (Thangar Bachan) டென்ஷனான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத வட மாவட்ட மண் சார்ந்த படங்களை இயக்கி புகழ் பெற்றவர் தங்கர் பச்சான். அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைபேசி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள தங்கர்பச்சான் தன்னுடைய படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வண்ணமாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இருந்தாலும் சினிமா, அரசியல் சார்ந்து அவர் தொடர்ந்து இயங்கி வருகிறார்.
பேரன்பும் பெருங்கோபமும் படம்
நாளை முதல் திரையரங்குகளில்…
The battle for justice and redemption begins From Tomorrow! ✊💥#PeranbumPerungobamum Worldwide Release Tomorrow – In Cinemas Near You#PaPk #PAPKFromTomorrow
@thankarbachan Presents
An Isaignani @ilaiyaraaja Musical
An @E5EntOfficial… pic.twitter.com/VqVq8pDhK7— தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) June 4, 2025
இப்படியான நிலையில் தங்கர் பச்சானின் மகனான விஜி பேரன்பும் பெருங்கோபமும் ( Peranbum Perungobamum) என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.. விஜித் சிறுவயதில் அழகி படத்தில் நந்திதா தாஸின் மகனாக நடித்து ரசிகர்களிடம் பரீட்சையமானவர். இப்படியான நிலையில் பேரன்பும் பெருங்கோபமும் படம் சாதிய பிரிவினைகள் மற்றும் ஆணவக் கொலைகள் ஆகியவற்றிற்கு எதிராக பேசும் படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி ஜூன் 3, 2025 அன்று நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இயக்குனர் சிவ பிரகாஷ் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சாதிக்கு எதிரான படம் என சொல்லிவிட்டு, ஜாதி கட்சியில் நின்று சீட்டு வாங்கி போட்டியிட்டவரின் மகனையே நடிக்க வைத்ததன் காரணம் என்ன? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சிவப்பிரகாஷ் இந்த படம் ஆரம்பிக்கும் போது தங்கர் பச்சான் தேர்தலில் போட்டியிட சீட்டு வாங்கவில்லை என பேசத் தொடங்கினார்.
பாமக சாதி கட்சியா?
அப்போது அவரை தள்ளிவிட்டு மைக்கை வாங்கிய தங்கர் பச்சான் டென்ஷனானார். கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளரின் பெயரை கேட்டு விட்டு, “தமிழ்நாட்டுல சாதி இல்லாமல், சாதி பார்க்காமல் வேட்பாளர் நிறுத்தக்கூடிய கட்சி ஒன்று சொல்லுங்கள். எல்லாம் எங்களுக்கு தெரியும். நீங்கள் எப்படி அப்படி கூறலாம். பாட்டாளி மக்கள் கட்சியில் நான் நின்றதாகவே இருக்கட்டும். அதனை எப்படி சாதி கட்சி என சொல்வீர்கள். ராமதாஸ், அன்புமணியை விட அரசியல் பேசுவதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்?.
ஆறு சாதியினருக்கு இட ஒதுக்கீடுகளை பெற்றுத் தந்தவர் ராமதாஸ். சொந்த சாதிக்காகவா வாங்கி கொடுத்தார். அப்படியெல்லாம் இல்லை. அவர் வாங்கி கொடுத்ததை அனுபவித்துவிட்டு சாதிக் கட்சி என சொல்வது என்ன நியாயம்?. அன்புமணி தவிர்த்து 18 சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர்களில் ஒருவரின் பெயரை சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த படம் தொடங்கும்போது நாம் பாமகவின் உறுப்பினர் கூட கிடையாது. அந்த கட்சியின் அலுவலகம் எங்கு இருக்கிறது என கூட தெரியாது. நான் அடிப்படையில் ஒரு கலைஞன் என்ற முறையில் பாருங்கள். அதனால் யாரும் இனிமேல் அப்படி பேசாதீர்கள்” என தங்கர் பச்சான் பேசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.