தமிழக சட்டசபை தேர்தல் 2026: மங்கிப்போன சுயேச்சைகளின் ஆதிக்கம்…. யாரும் வெற்றி இல்லை!
Trend of Independent Candidates: தமிழகத்தில் 1967 முதல் 2006 வரை பல்வேறு தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று சட்டசபையை அலங்கரித்தனர். ஆனால், 2011-க்குப் பிறகு பொதுத் தேர்தல்களில் சுயேச்சைகளின் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் பெற்ற வெற்றி மட்டுமே கடந்த பத்தாண்டுகளில் ஒரு பெரிய விதிவிலக்காக அமைந்தது.

சுயேச்சை வேட்பாளர்கள்
தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரு காலத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தனர். பெரிய கட்சிகளின் அலை வீசினாலும், தனிநபராக நின்று மக்களின் நம்பிக்கையைப் பெற்று சட்டசபைக்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கை வியக்கத்தக்கதாக இருந்தது. குறிப்பாக, 1967-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 6 சுயேச்சைகளும், 1971-ல் 8 பேரும் வெற்றி பெற்றனர். அதன் பிறகு 1977-ல் ஒருவர் மட்டுமே வென்றாலும், 1980-ல் மீண்டும் 8 பேர் வெற்றி பெற்று அசத்தினர். 1984 மற்றும் 1989 தேர்தல்களில் முறையே 4 மற்றும் 5 சுயேச்சைகள் சட்டப்பேரவைக்குத் தேர்வாகி, ஜனநாயகத்தில் தனிநபர் செல்வாக்கை நிலைநாட்டினர்.
சமீபத்திய சரிவும் ஆர்.கே. நகர் விதிவிலக்கும்
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், கட்சி அரசியலின் தீவிரமும் அதிகரித்த நிலையில், 1991 முதல் சுயேச்சைகளின் வெற்றி வாய்ப்பு குறையத் தொடங்கியது. 1991 மற்றும் 1996-ல் தலா ஒருவர் மட்டுமே வென்ற நிலையில், 2001-ல் 3 பேரும், 2006-ல் ஒருவரும் வெற்றி பெற்றனர். இருப்பினும், 2011 மற்றும் 2016 பொதுத் தேர்தல்களில் ஒரு சுயேச்சை கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 2016-ல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஒரு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தினார்.
Also Read: அதிமுக கோட்டையைத் தகர்த்த ‘வெற்றி’க் கழகம்: ராயபுரத்தில் ஜெயக்குமார் படுதோல்வி – டெபாசிட் காலி!
தற்போதைய நிலை மற்றும் தொடரும் வறட்சி
கடந்த சில தேர்தல்களாக தமிழக மக்கள் பெரிய கட்சிகள் அல்லது கூட்டணிகளுக்கே வாக்களிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு சுயேச்சை வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல, சமீபத்தில் நடந்த தேர்தல்களிலும் சுயேச்சைகளால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. 1960-களில் தொடங்கி 2000-களின் முற்பகுதி வரை சட்டசபையை அலங்கரித்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை, தற்போது முற்றிலுமாக பூஜ்ஜியமாக மாறியுள்ளது தமிழக அரசியலில் ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.