சென்னை, மே 7, 2026: நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த சூழலில், ஆட்சி அமைப்பதற்கு 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், தமிழக வெற்றி கழகத்திடம் தற்போது 108 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தருவதாக தெரிவித்திருந்த சூழலில், தற்போது வரை தமிழக வெற்றி கழகத்திற்கு கூடுதலாக 12 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இன்னும் 6 இடங்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
தவெகவிற்கு யார் ஆதரவு கொடுப்பார்கள்?
இந்த சூழலில், இடதுசாரி கட்சிகளுக்கு தமிழக வெற்றி கழகம் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டு பின்னர் முடிவுகள் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்க தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து உரிமைக் கோரிக்கை வைத்தார். ஆனால், ஆளுநர் தரப்பில் தற்போது வரை அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை. பெரும்பான்மையை நிரூபித்த பின்னரே ஆட்சி அமைக்க அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: திமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும்.. தவெக அரசு அமைக்க முட்டுக்கட்டை போடும் அதிமுக பாஜக – எம்.பி கலாநிதி வீராசாமி..
அதேபோல், திமுக மற்றும் அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக யூகங்கள் வெளியானது. ஆனால், “திமுக வலுவான எதிர்க்கட்சியாகவே செயல்படும். தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு எந்தவித இடையூறும் செய்ய மாட்டோம்” என முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பனையூரில் அவசர ஆலோசனை கூட்டம்:
இந்த சூழலில், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பனையூர் அலுவலகத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பரபரப்பான அரசியல் சூழலில், சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் அனைவரையும் வரவழைத்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. பொதுச்செயலாளர் என். ஆனந்தன் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த கட்ட நகர்வுகள் என்ன, உயர் நீதிமன்றத்தை நாடலாமா வேண்டாமா, பெரும்பான்மையை நிரூபிக்க என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.