சிபில் ஸ்கோரில் இவ்வளவு பிரச்னையா? வைரலாகும் எம்பி சு.வெங்கடேசனின் பதிவு

MP Slams CIBIL Score System : சிபில் ஸ்கோர் என்பது சாமானிய மக்களை துன்புறுத்தும் ஒரு அநியாயமான நடைமுறையாக உள்ளது என எம்பி சு. வெங்கடேசன் விமர்சித்துள்ளார். ஒரே ஒரு மாதத் தவணை தாமதமாக கட சிபில் ஸ்கோர் பாதிக்கப்படுவதாகவும் அவர் தனது பதிவில் கவலை தெரிவித்துள்ளார்.

சிபில் ஸ்கோரில் இவ்வளவு பிரச்னையா? வைரலாகும் எம்பி சு.வெங்கடேசனின் பதிவு

சிபில் ஸ்கோர் குறித்து எம்பி சு.வெங்கடேசன்

Published: 

27 Jun 2025 16:43 PM

சிபில் ஸ்கோர்  (CIBIL Score)என்பது இந்தியாவில் நபர் ஒருவரின் கடன்திறனை மதிப்பீடு செய்யும் மதிப்பீடு முறையாகும். இது TransUnion CIBIL என்ற தனியார் நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும். இதில் 800 மேல் ஸ்கோர் பெற்றவர்களே கடன்பெற தகுதியானவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால், இந்த சிபில் ஸ்கோர் மதிப்பீடு பல்லாயிரக்கணக்கான எளிய மக்களை பாதித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் (Su.Venkatesan) வலியுறுத்துகிறார். சிபில் ஸ்கோர் என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனமொன்று இந்திய குடிமக்களையும், சிறு தொழில் நிறுவனங்களையும் கடன்திறனற்றவர்களாக மதிப்பீடு செய்து, கடன்களுக்கு அதிக வட்டியை ஏற்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளுகிறது. அநீதியான நடைமுறை என்று அவர் கடுமையாக விம்ரசித்துள்ளார்.

சிபில் ஸ்கோரில் உள்ள பிரச்னை என்ன?

இது தொடர்பாக எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ஒரே ஒரு முறை மாதத்தவணையை சரியாக செலுத்தாவிட்டால் கூட சிபில் ஸ்கோரில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் கிரெடிட் கார்டு வரம்பில் 30 சதவிகிதத்துக்கும் மேல் பயன்படுத்தினால் கூட சிபில் ஸ்கோர் குறைகிறது. பல வங்கிகளில் கடனுக்காக விண்ணப்பித்து ஒப்பீடு செய்தால் கூட ஸ்கோர் குறைகிறது.  இந்தியாவில் 60 கோடிக்கும் அதிகமான மக்கள் மற்றும் 2.5 கோடி சிறிய, மிகச்சிறிய நிறுவனங்கள் இந்த சிபில் நிறுவனத்தின் மதிப்பீடு அடிப்படையில் பாதிக்கப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

சிபில் ஸ்கோர் குறித்து எம்பி சு.வெங்கடேசனின் எக்ஸ் பதிவு

 

வணிகர்களுக்கு சலுகை, பொதுமக்களுக்கு தண்டனை?

 பெரிய அளவில் கடன் தவிர்க்கும் வணிக நிறுவனங்கள் கூட, சிறிய தொகையை செலுத்தி சுலபமாக மீண்டும் கடன் பெறும் சூழ்நிலையை சிபில் ஸ்கோர் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சாதாரண மக்கள் ஒரு தவணை தவறினால் கூட மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் தவறான தரவுகள் காரணாகவும் ஸ்கோர் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு கடன்கள் நிராகரிக்கப்படுகின்றன. அந்த தவறுகளை சரி செய்யும் முறைகள் மிகவும் சிக்கலானவை என்றும் அவர் குற்றம்சாட்டுகிறார்.

2002க்கு முந்தைய நடைமுறை சிறந்தது

கடந்த 2002 ஆம் ஆண்டுக்கு முன்னால், இந்திய ரிசர்வ் வங்கியே நமது கடன் திறன் விவரங்களை பராமரித்து வந்தது. அது மிகவும் வெளிப்படைத்தன்மையும், பொறுப்புமிக்க அமைப்பாக இருந்தது. அந்த அமைப்பையே மீண்டும் கொண்டு வந்து, சிபில் மாதிரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். கடன்திறன் மதிப்பீடு என்பது அரசு கட்டுப்பாட்டில், பொதுநல நோக்கத்துடன் அமைய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற முயலும் பொதுமக்களுக்கு மட்டுமே கடுமையான அளவில் இந்த சிபில் ஸ்கோர் பாதிப்பு ஏற்படுகிறது என்றும், இது முழுமையாக அரசு கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்துகிறார்.