முடிவுக்கு வந்த இந்தியா – பாகிஸ்தான் பதற்றம்.. டிரம்ப் முக்கிய அறிவிப்பு!

Full and Immediate Ceasefire on India - Pakistan Conflict | இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூரை இந்திய அரசு கையில் எடுத்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இவ்வாறு அறிவித்துள்ளார்.

முடிவுக்கு வந்த இந்தியா - பாகிஸ்தான் பதற்றம்.. டிரம்ப் முக்கிய அறிவிப்பு!

டொனால்ட் டிரம்ப்

Updated On: 

10 May 2025 19:31 PM

சென்னை, மே 10 : இந்தியா – பாகிஸ்தானுக்கு (India – Pakistan) இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை (Ceasefire) அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அமெரிக்கா நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு நாடுகளும் முழு மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பஹல்காம் தாக்குதலை கண்டித்து இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் மூலம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் டிரம்ப் இவ்வாறு அறிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி – ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்த இந்தியா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொடூரமாக சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் உலக நாடுகளை உலுக்கிய நிலையில், கடும் கோபம் அடைந்த இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூரை (Operation Sindoor) கையில் எடுத்த இந்தியா பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்தி வந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எக்ஸ் பதிவு

இந்த நிலையில், இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நீண்ட நேர உரையாடல்களுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே முழு மற்றும் உடனடி போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். பொதுநலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ள இரு நாடுகளுக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு

இதனை உறுதி செய்யும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார்.