Whatsapp: வாட்ஸ்அப்பில் புது மோசடி.. பயனர்களே உஷார்.. தவிர்ப்பது எப்படி தெரியுமா?
வாட்ஸ்அப் பயன்பாட்டில் காணாமல் போன நபர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி நடைபெறும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. APK கோப்புகளைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் திருடப்படுகின்றன. இதுதொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் மோசடிகள் நடைபெற்றால் உடனே காவல்துறையை நாடவும்.

உலகளவில் சைபர் குற்றங்கள் (Cyber Crimes) தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க கடுமையான நடவடிக்கை, சட்டங்கள் கொண்டு வந்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. தினம் தினம் புதிதாக மோசடிகள் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. இப்படியான நிலையில் உலகளவில் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப் செயலியில் (Whatsapp) சைபர் குற்றவாளிகளின் முக்கிய இலக்காக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப்பில் மாதம் இருமுறை ஏதேனும் ஒரு அப்டேட் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் மோசடியும் வித்தியாசமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் காணாமல் போனவர்களின் புகைப்படங்களை வைத்து மோசடி நடைபெறுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.
மோசடி எப்படி நடக்கிறது?
அதாவது உங்களுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு சைபர் குற்றவாளிகள் தெரியாத எண்ணிலிருந்து காணாமல் போன ஒரு நபரின் படத்தை அனுப்புவார்கள். அதில் “Missing” என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கும். அந்த நபரைக் கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை விடுப்பார்கள். அதுமட்டுமல்லாமல் உங்களுடைய நம்பருக்கு அழைத்து காணாமல் போனவரை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்பார்கள்.
நீங்கள் இதனை நம்பி அந்த படத்தை ஒரு கிளிக் செய்தால் போதும். உங்கள் செல்போன் ஹேக் செய்யப்படும். இதன்மூலம் மோசடி செய்பவர்கள் உங்கள் தொலைபேசி விவரங்களையும், நிதி பரிவர்த்தனைகள் தகவல்களையும், புகைப்படம், வீடியோக்களை திருடுவதற்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
அந்த காணாமல் போனதாக அனுப்பப்படும் மோசடி படங்கள் APK கோப்புகளில் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பப்படும். உங்கள் செல்போனில் நீங்கள் அந்த கோப்பை இன்ஸ்டால் செய்தால் வைரஸ் பரவும். செல்போனில் தரவுகள் திருடப்படும்.
தப்பிப்பது எப்படி?
உங்களுடைய வாட்ஸ்அப்பிற்கு தெரியாத எண்களிலிருந்து வரும் எந்த படங்களையும் அல்லது இணைப்புகளையும் ஓபன் செய்ய வேண்டாம். நேரடியாக கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து அல்லாத APK கோப்புகளைப் பதிவிறக்கம் எக்காரணம் கொண்டும் செய்ய வேண்டாம்.
வாட்ஸ்அப்பில் சந்தேகத்திற்கிடமான எண்களை கண்டால் உடனே பிளாக் செய்யவும். உடனடியாக அது தொடர்பாக புகாரளிக்கவும். இப்படியான அச்சுறுத்தல்களைக் கண்டறிய உங்கள் செல்போனின் பாதுகாப்பு மென்பொருளை எப்போதும் புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள்.
மோசடி நடந்தால் என்ன பண்ணலாம்?
ஒருவேளை உங்கள் வட்டாரத்தில் யாரேனும் சைபர் மோசடியில் பணம் அல்லது வேறு மாதிரியான இழப்பை சந்தித்திருந்தால் தேசிய சைபர் கிரைம் எண்ணான 1930க்கு தொடர்பு கொள்ளவும். https://cybercrime.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக புகார் பதிவு செய்யலாம். உங்கள் புகாருக்கு ஒப்புதல் எண் (acknowledgement number) வழங்கப்படும். அதனை வைத்து நீங்கள் சந்தித்த மோசடி தொடர்பான விவரங்களை எல்லாம் அந்த போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் அருகிலுள்ள காவல் நிலையத்திலும் புகாரளிக்கலாம். நிதி இழப்பை சந்தித்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி கிளையை அணுகி தகவல் தெரிவித்தால் நிதி பரிவர்த்தனை செய்யப்படும் தவிர்க்கப்படும்.
மேலும் எக்காரணம் கொண்டும் சமூக வலைத்தளச் செயலிகளில் வரும் பரிசு தொடர்பான இணைப்புகள், ஆஃபர் தொடர்பான விளம்பரங்கள், வங்கி கணக்கு தொடர்பாக மெசெஜ் மற்றும் செல்போன் கால் மூலமாக தகவல்கள் பெறுவது உள்ளிட்ட விஷயங்களை கவனமுடன் கையாள வேண்டும்.