தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெளுக்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் அலர்ட்!
Tamil Nadu weather update : தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு காஞ்சிபுரம், ராணிப்பேட், திருவண்ணாமலை, கள்ளிக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என கணித்துள்ளது.

சென்னை, ஜூன் 06 : தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் (tamil nadu weather update) தெரிவித்துள்ளது. 2025 ஜூன் 10,11,12ஆம் தேதிகளில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிகத்தில் 2025 மே மாதம் முழுவதுமே மழை வெளுத்து வாங்கியது. 2025 மே 24ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு வெளுக்கும் கனமழை
குறிப்பாக, கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களி மழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு, 2025 மே 31ஆம் தேதி முதல் பெரிய அளவில் மழை பொழிவு இல்லை. மீண்டும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இந்த நிலையில், மூன்று தினங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 ஜூன் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்கள்?
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கைhttps://t.co/467dVuULiL pic.twitter.com/bqN2hYbuTa
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 6, 2025
மேலும், 2025 ஜூன் 10ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மிதமான மழையும், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2025 ஜூன் 11ஆம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் 12ஆம் தேதி வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என கணித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை, 2025 ஜூன் 6,7ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செசியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் 2025 ஜூன் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு என்றும் இருப்பினும் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.