Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அடுத்த 4 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் சென்னையில் 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை மையம் அலர்ட்!
வெப்பநிலைImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Apr 2025 12:51 PM

சென்னை, ஏப்ரல் 26 : தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் (Tamil Nadu Heatwave Alert) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் 4 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் அக்னி வெயில் தொடங்க உள்ளது. 2025 மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டு வெப்பநிலை பதிவாகி வருகிறது.

4 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்

இதனால், மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.  குறிப்பாக, மதிய நேரங்களில் அனல் காற்றும் அவ்வப்போது வீசுகிறது. இன்னும் மே மாதங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், நான்கு நாட்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

அதன்படி, 2025 ஏப்ரல் 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இருக்கக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 செல்சியஸ் வரை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

வானிலை மையம் அலர்ட்


சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

அதே நேரத்தில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 2025 ஏப்ரல் 26ஆம் தேதி முதல் மே 1ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தி மற்றும் மதுரை விமான நிலையத்தில் 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக உள்ளது. தொடர்ந்து, திருச்சியில் 40.1 டிகிரி செல்சியஸ், வேலூரில் 40.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 37.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. அக்னி வெயில்  2025 மே 4ஆம்  தேதி தொடங்குவதாக தெரிகிறது. எனவே, வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மோசமாக இருக்கும் என தெரிகிறது.