Tamil Nadu CM MK Stalin: அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு.. 7 வங்கிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து..!
Life and Accident Insurance: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கு இலவச ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு வழங்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். 7 வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்து சம்பவங்களில் ரூ.1 கோடி வரை நிதி உதவி வழங்கப்படும். மகள்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். வங்கிக் கடன்களுக்கும் சலுகைகள் வழங்கப்படும். இந்த திட்டம் இந்தியாவில் முன்னோடியானது.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை
சென்னை, மே 19: தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு (Tamil Nadu Govt Staff) கட்டணமின்றி ஆயுள் காப்பீடு (Life Insurance) மற்றும் விபத்து காப்பீடு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) இன்று அதாவது 2025 மே 19ம் தேதி அறிவித்தார். இதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக, அரசு ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீட்டை கட்டணமின்றி வழங்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். இதற்கான ஒப்பந்தம் 7 வங்கிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் போடப்பட்டுள்ளது.
என்னென்ன பலன்கள்..?
- அரசு ஊழியர்கள் எதிர்பாராத விதமாக நடக்கும் விபத்தில் உயிரிழந்தாலோ அல்லது விபத்து காரணமாக கை அல்லது கால்களை இழந்தாலோ தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக ரூ. 1 கோடி நிதி வழங்கப்படும்.
- அரசு ஊழியர்கள் விபத்தில் உயிரிழந்தால் அவரது குடும்பத்தில் இருக்கும் திருமண வயதை எட்டிய மகள்கள் இருந்தால் 2 பேருக்கு தலா ரூ. 5 லட்சம் என ரூ. 10 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.
- தனிநபர் வங்கிக்கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றை அரசு ஊழியர்கள் வங்கிகளில் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள சலுகைகள் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், கனரா பேங்க், இந்தியன் பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, பாரத ஸ்டேட் பேங்க் ஆகிய 7 வங்கிகள் அரசு ஊழியர்களுக்கு எந்தவிட கட்டணம் இன்றி வழங்கிட முன்வந்துள்ளன.
யார் யார் பங்கேற்றார்கள்..?
அரசு ஊழியர்களுக்கான ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு ஆகியவற்றை 7 முன்னோடி வங்கிகள் மூலமாகக் கட்டணமின்றி வழங்க, இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக நமது அரசு ஏற்பாடு செய்துள்ளது! இதற்கான MoU இன்று மேற்கொள்ளப்பட்டது.
சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவித்தபடி, தனிநபர் வங்கிக்… pic.twitter.com/z2BYykYTrQ
— M.K.Stalin (@mkstalin) May 19, 2025
இந்த சலுகைகள் உறுதிசெய்யும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் மற்றும் வங்கிகளின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்போது தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் நாகராஜன். முதன்மை செயலாளர் உதயச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் சாருஸ்ரீ மற்றும் வங்கிகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.