“இனியும் தவறு நிகழக்கூடாது”.. 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்தது ஏன்? நீதிபதி பரபர விளக்கம்!!
sathankulam case: போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. அவர்களுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 36 லட்சம் அபராதமாக விதிக்கப்படுகிறது. அதை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும். அபராதத்தை செலுத்தாதபட்சத்தில் வருவாய் வசூல் சட்டப்படி அந்தத் தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோப்புப் புகைப்படம்
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் நேற்றைய தினம் (ஏப்.6) குற்றாவாளிகளான 9 போலீசாருக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பானது 650 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. அதில் நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்து உள்ள சாராம்சங்கள் சிலவற்றை காணலாம். போலீஸ் நிலைய மரணங்கள் இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு முதல் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அஜீத் குமார் கொலை வழக்கு வரையிலும் போலீஸ் நிலையங்களில் நடக்கும் சித்ரவதை மரணங்களை எடுத்துக்காட்டாக கூறலாம். தமிழக காவல்துறையில் பல நேர்மையான அதிகாரிகள் உள்ளனர்.
இதையும் படிக்க: சாத்தான்குளம் லாக்அப் மரண வழக்கு: இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீசாருக்கு உச்சபட்ச தண்டனை!
அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்:
பொதுவாக போலீஸ் நிலையங்களில் நடந்த குற்றச் சம்பவங்களுக்கு நேரடி சாட்சிகள் இருக்காது. இந்த வழக்கில் கேமரா காட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. சக பெண் போலீசார் உட்பட போலீஸ்காரர்களும் இந்த குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக சாட்சியங்கள் அளித்துள்ளனர். போலீஸ் நிலையங்களில் நடக்கும் மரணங்களை சகித்துக் கொள்ள முடியாது என்று தமிழக அரசு அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதேபோல மத்திய அரசு சார்பிலும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்கள்.
இனியும் தவறு நிகழக்கூடாது:
இந்த சம்பவம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் வகையிலேயே இருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையிலும் தீர்ப்பு இருக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் முடிவு செய்தது. இனியும் இவ்வாறு நிகழக்கூடாது என்பதற்கு உதாரணமாகவும் குற்றவாளிகள் இனிமேல் திருந்த வாய்ப்பில்லை என்பதாலும் பொதுமக்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் நினைப்பதாலும் 9 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த தீர்ப்பில் நீதிபதி கூறி இருந்தார்.
1.36 கோடி அபராதம்:
எனவே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. அவர்களுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 36 லட்சம் அபராதமாக விதிக்கப்படுகிறது. அதை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும். அபராதத்தை செலுத்தாதபட்சத்தில் வருவாய் வசூல் சட்டப்படி அந்தத் தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த தீர்ப்பில் நீதிபதி கூறி இருந்தார்.
இதையும் படிக்க: சாத்தான்குளம் வழக்கு தீர்ப்பு… இனிமேல் வேறு எந்த குடும்பத்துக்கும்… ஜெயராஜ் மகள் கண்ணீர் மல்க பரபரப்பு பேட்டி!
பேனா முனையை உடைத்த நீதிபதி:
பொதுவாக வழக்குகளில் மரண தண்டனை விதிக்கும் போது அதுபோன்ற நிலை மீண்டும் வரக்கூடாது எனவும், அது போன்ற குற்றங்கள் நடக்கக்கூடாது எனக்கருதியும் தீர்ப்பை எழுத பயன்படுத்திய பேனாவை நீதிபதிகள் உடைப்பது வழக்கம். அது போன்று நேற்று சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி முத்துக்குமரன் தனது பேனா முனையை உடைத்தது குறிப்பிடத்தக்கது.