ஏற்காடு மலர் கண்காட்சி… பூத்து குலுங்கும் மலர்கள்.. கட்டணம் எவ்வளவு? முழு விவரம்!
yercaud flower show 2025 : சேலம் ஏற்காடு மலர் கண்காட்சி 2025 மே 23ஆம் தேதியான நேற்று தொடங்கப்பட்டது. ஏற்காடு மலர் கண்காட்சி 2025 மே 27ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மலர் கண்காட்சிக்கான நுழைவு கட்டணம், நேரம் போன்ற விவரங்களை பார்ப்போம்.

சேலம், மே 24 : சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா கோலாகலமாக 2025 மே 23ஆம் தேதியான நேற்று தொடங்கியது. ஏற்காட்டில் 48வது கோடை விழா மற்றும மலர் கண்காட்சி (Yercaud Flower show 2025) தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலாவுக்கு பெயர்போனது. குறிப்பாக, கோடை விடுமுறையில் (yercaud summer festival) சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகவே இருக்கும். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ஆண்தோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோடை விழாவின் முக்கிய நிகழ்வாக மலர் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான மலர் கண்காட்சி மே 23ஆம் தேதியான நேற்று தொடங்கப்பட்டது. 48வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஏற்காடு மலர் கண்காட்சி
ஏற்காடு அண்ணா பூங்காவில் மே 23ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. மலர் கண்காட்சியை பார்ப்பதற்கு நேற்று முதலே சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்த மலர் கண்காட்சியில் தினமும் பாரம்பரிய உணவுப் போட்டி, ரங்கோலி போட்டி, சுற்றுலாப் பயணிகளுக்கான படகு சவாரி போட்டிகள், செல்ல நாய் கண்காட்சி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறும்.
விழாவின் அனைத்து நாட்களிலும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்படும். அண்ணா பூங்காவில் 1.50 லட்சம் மலர்களை கொண்டு மலர்க் காட்சி, பழக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 20,000க்கும் மேற்பட்ட வண்ணமலர் தொட்டிகளை கொண்டு மலர்க் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. யானைகள், மான்கள், குரங்குகள் மற்றும் பிற விலங்குகள் பிற விலங்குகளின் உருவங்கள் 50,000 மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டடுள்ளன.
டிக்கெட் கட்டணம்
அண்ணா பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. இந்த மலர்க் கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக சிறார்கள் ரூ.25 செலுத்த வேண்டும். பெரியர்கள் ரூ.50 செலுத்த வேண்டும். நுழைவு கட்டணத்தை நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமும் செலுத்திக் கொள்ளலாம். கவுண்டர்களில் கூட்டத்தை தவிர்க்க, ஆன்லைன் கட்டணத்தை செலுத்துவது நல்லது. ஆன்லைன் தோட்டக்கலை இணையத்திற்கு சென்று தேதி, எத்தனை பேர் போன்ற விவரங்களை உள்ளீட்டு கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம். ஏற்காடு மலர் கண்காட்சி 2025 மே 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அண்மையில் தான், ஊட்டி மலர் கண்காட்சி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.