சேலத்தில் அன்புமணி தலைமையில் நடக்கும் பா.ம.க பொதுக்குழு கூட்டம்.. மருத்துவமனையில் சேலம் எம்.எல்.ஏ அருள்..
PMK Meeting: சேலத்தில் ஜூன் 19, 2025 தேதியான இன்று பா.ம.க கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ம.க பொதுக்குழு கூட்டம்: பாமகவில் உட்கட்சி விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அன்புமணி ராமதாஸ் 10 மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். அந்த வகையில் ஜூன் 15, 16, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அன்புமணி பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஜூன் 19 2025 தேதியான இன்று சேலம் மற்றும் தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு என்பது தொடர்ந்த நிலவு வருகிறது. இருவரும் பிரிந்து தனித்தனியாக கட்சியின் செயல்பாடுகள் அல்லது கட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் கட்சிக்குள் ஒரு குழப்பமான சூழல் நிலவுகிறது.
தனித்தனியாக செயல்படும் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ்:
கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் யாரை ஆதரிப்பது என தெரியாமல் இருக்கின்றனர். இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் எண்ணம் ஆகும். ஆனால் தற்போது வரை இருவரும் தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் அன்புமணி ராமதாஸுக்கு ஆதரவளித்த திலகபாமா உள்ளிட்ட 41 மாவட்ட நிர்வாகிகளை கட்சி நிறுவனர் ராமதாஸ் நீக்கிவிட்டு, அவரது ஆதரவாளர்களை நியமனம் செய்தார். அதேபோல் தைலாபுரத்தில் நடக்கக்கூடிய அனைத்து ஆலோசனைக் கூட்டங்களிலும் ராமதாஸ் தனியே சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம்:
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற, ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற போது.! pic.twitter.com/p27J1QIpvM
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 18, 2025
இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில் அன்புமணி ராமதாஸ் அவரது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடத்தி வருகிறார். அந்த வகையில் 10 மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். நேற்று கள்ளக்குறிச்சியில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 36 ஆண்டுகள் ஆகியும் பாமக இன்னும் ஆட்சிக்கு வரவில்லை என்பது மிகுந்த வருத்தம் என குறிப்பிட்டிருந்தா அன்புமணி.
ஜூன் 19 2025 தேதி யான இன்று சேலம் தர்மபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஆனது நடைபெற உள்ளது. இந்த நிலையில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருளுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சட்டமன்ற உறுப்பினர் அருள் தொடர்ந்து பாமக கட்சி நிறுவனர் ராமதாசை சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று ஜூன் 19 2025 சேலத்தில் பொதுக்குழு கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடக்க இருக்கும் நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் ராமதாஸின் ஆதரவாளராக செயல்படுவார் என மறைமுகமாக தெரிவித்துள்ளதாக பாமக வட்டாரங்களில் பேசப்படுகிறது.