ராமதாஸ் – அன்புமணி இணைந்து வழிநடத்த வேண்டும்.. உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த பா.ம.க
PMK Protest: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இருவரும் இணைந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர் பாமகவினர்.

பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் உண்ணா விரத போராட்டம்: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி நாளை அதாவது ஜூன் 23 2025 தேதியான நாளை தைலாபுரத்தில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி விவகாரம் தற்போது பூதாகரமாகி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
அதிகரிக்கும் தந்தை மகன் மோதல்:
கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே இருக்கும் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இருவரும் தனித்தனியே கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ராமதாஸ் ஆதரவாளர்கள் தனியாகவும், அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் தனியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இதனால் கட்சி தொண்டர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சி நிறுவனர் ராமதாஸ் நீக்கி உத்தரவிட்டார். மேலும் தைலாபுரத்தில் இருக்கக்கூடிய கட்சி அலுவலகத்தில் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனியே ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். அதாவது தேர்தலை எப்படி சந்திப்பது, வாக்குகளை எப்படி பெறுவது என்பது குறித்து பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இறங்கி வந்த அன்புமணி.. விட்டுக்கொடுக்காமல் இருக்கும் ராமதாஸ்:
இது ஒரு பக்கம் இருக்க அன்புமணி ராமதாஸ் தனியாக செயல்பட்டு பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். மாவட்டம் தோறும் நடத்தும் இந்த பொதுக்கூட்டத்திற்கு ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நிர்வாகிகள் குழம்பியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தந்தையர் தினத்தன்று அன்புமணி ராமதாஸ் தனது தந்தை ராமதாசை வாழ்த்தி, மேடையில் மன்னிப்பு கேட்டார்.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனை சரியாகும் என எண்ணப்பட்ட நிலையில் கட்சி நிறுவனர் ராமதாஸ் விட்டுக் கொடுக்காமல் செயல்பட்டு வருகிறார் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் எதிர்த்தும் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தும் வருகிறார்.
உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த பாமக:
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இருவரும் இணைந்து பாமகவினரை வழிநடத்த வேண்டும் என வலியுறுத்தி கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நாளை அதாவது ஜூன் 23 2025 அன்று தைலாபுரத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்