கரூரில் நடந்த துயரமான சம்பவம் வருத்தம் அளிக்கிறது.. பிரதமர் மோடி இரங்கல்..

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் கரூர் பிரச்சாரத்தில் சுமார் 31 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் செய்தி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், “ இந்த கடினமான வேளையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மனவலிமை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்

கரூரில் நடந்த துயரமான சம்பவம் வருத்தம் அளிக்கிறது.. பிரதமர் மோடி இரங்கல்..

கோப்பு புகைப்படம்

Updated On: 

27 Sep 2025 22:35 PM

 IST

கரூர், செப்டம்பர் 27, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் கரூர் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 31-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 -க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காலை முதல் மக்கள் பல மணி நேரமாக ஒரே இடத்தில் உணவின்றி, குடிநீரின்றி காத்திருந்ததால், பலரும் மயங்கி விழத் தொடங்கினர்.
பின்னர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரையை முடித்து அந்த பகுதியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற முயன்றனர். குறுகிய இடம் என்பதால், அதிக மக்கள் ஒன்றாக வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலரும் சிக்கித் தவித்து மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

பிரதமர் மோடி இரங்கல்:

இந்த சம்பவம் தமிழகமெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ கரூரில் நடைபெற்ற ஒரு அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த இந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிப்பதாகும். இந்த கடினமான வேளையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மனவலிமை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்:


இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அவரது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “ கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் அவர்கள் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது . உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

ராஜினி இரங்கல்:


நடிகர் ரஜினிகாந்த், “ கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்” என தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்:


இது தொடர்பான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவில், “ கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் – ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்:


இது தொடர்பான முதலமைச்சர் ஸ்டாலின் பதிவில், “ கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாண்புமிகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களையும் – மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்