மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர்.. ரூ. 20 லட்சத்துக்கான காசோலை வழங்கிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்..
Sanitary Worker Varalakshmi Electrocuted: 30 வயதான தூய்மை பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை நேரில் சென்று வழங்கினார். மேலும் பிள்ளைகளின் படிப்பு செலவுகள் திமுக ஏற்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலட்சுமியின் குடும்பத்தினருக்கு காசோலை வழங்கிய அமைச்சர்
சென்னை, ஆகஸ்ட் 23, 2025: சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஆகஸ்ட் 22, 2025 அன்று மாலை முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர்ச்சியான மழையின் காரணமாக பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், தூய்மை பணியாளர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் குப்பையை அகற்றும் பணியிலும், தேங்கி இருந்த தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆகஸ்ட் 23, 2025 அதிகாலை, கண்ணகி நகரில் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரில் மின்சார கேபிள் தவறி விழுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் வரலட்சுமி என்ற முப்பது வயது தூய்மை பணியாளர், தேங்கியிருந்த தண்ணீரில் காலை வைத்தார்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர்:
உடனே மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். இதைக் கண்ட சக தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து, வரலட்சுமியை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், இது தொடர்பாக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
Also Read: தென்மாவட்டம் குறி.. 4ம் கட்ட சுற்றுப்பயணத்தை அறிவித்த இபிஎஸ்.. திட்டம் என்ன?
உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி சோழிங்கநல்லூர் மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த திருமதி வரலட்சுமி அவர்கள் பணிக்குச் செல்லும் வழியில் மின்சாரம் தாக்கி இறந்ததை முன்னிட்டு அவரது குடும்பத்தினருக்கு ரூ.20 இலட்சம் நிவாரண உதவித்தொகைக்கான காசோலை… pic.twitter.com/H8eYWCDQjC
— Subramanian.Ma (@Subramanian_ma) August 23, 2025
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் பழுதை சரிசெய்தனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மின்சார வாரியம் சார்பில் ரூ.10 லட்சமும், தனியார் நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க: வெளிநாட்டில் ஓனர்.. பில்டிங்கை வாடகைக்கு விட்டு ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர்!
இதற்கான காசோலையை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வழங்கினார். மேலும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த வரலட்சுமியின் கணவருக்கு சென்னை மாநகராட்சியில் பணி வழங்கப்படும் என்றும், அவரது இரண்டு குழந்தைகளின் கல்விச்செலவையும் திமுக ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.