NITI Aayog: டெல்லி பயணம் குறித்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமி.. பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!
Tamil Nadu CM Stalin Delhi visit explanation: நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டது குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்ததை தொடர்ந்து, ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டின் நலனுக்காகவும், மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும், பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு மாறாக, திமுக தனது நிலைப்பாட்டை உறுதியாக வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னை, மே 25: டெல்லியில் நேற்று அதாவது 2025 மே 25ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் (NITI Aayog) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) கலந்து கொண்டது மாநிலம் நெருக்கடியை எதிர்கொள்வதால்தான் என்று தெரிவித்தார். இதற்கு, தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம்:
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நான் டெல்லி பயணம் மேற்கொண்டது அரசியல் எதிரிகளின் அடிவயிற்றில் புளியை கரைத்ததால், கற்பனை சிறகுகளை பறக்கவிட்டு அலாதி இன்பத்தை கண்டுகொண்டு இருக்கிறார்கள்.
கார்கள் பலவற்றை மாறி மாறி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்த்து கட்சியையும் ஒட்டுமொத்தமாக அடமானம் வைத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்தவர், என்னுடைய டெல்லி பயணம் குறித்து ஏதேதோ அளந்துவிட்டதை ரசித்தபடியே டெல்லிக்கு புறப்பட்டு சென்றேன்.
முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு:
#PahalgamTerroristAttack-இன் போது சென்னையில் பேரணி சென்று ஒற்றுமைக்குரல் எழுப்பினேன்! நாட்டின் நலனை எப்படி தி.மு.க. விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என #NITIAayog கூட்டத்தில் உரையாற்றினேன்!
தமிழ்நாட்டின் நலன் காத்திடவும் – மாநில… pic.twitter.com/niY838ONVL
— M.K.Stalin (@mkstalin) May 25, 2025
அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை போல அடிமை சாசனம் என்றும் எழுதி கொடுக்கமாட்டோம். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்றவை திமுகவினரை குறி வைத்ததுபோல இந்தியாவில் வேறு எந்த கட்சியையும் குறிவைத்தது கிடையாது. அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு சட்டரீதியான போராட்டத்தின் மூலம்தான் வென்று வருகிறோமே தவிர, அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை போல அடிமை சாசனத்தை எழுதி கொடுத்தது இல்லை.
அமலாக்கத்துறை நடவடிக்கைகள் சட்டமீறல் என உச்சநீதிமன்றமே கருத்து தெரிவித்துள்ளது. எதிரிகள் பழைய மாவையே புளிக்க புளிக்க அரைத்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் நிலைப்பாடு என்பது வேறு, அரசுடன் நாட்டின் நலன் கருதி ஒத்துழைப்பது என்பது வேறு என்ற அடிப்படையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றேன். தமிழ்நாட்டிற்கான திட்டங்களையும், நிலுவையில் உள்ளவற்றையும் நேரடியாகவே வலியுறுத்தினேன். ஆர்த்தெழும் இயக்கமான திராவிட முன்னேற்ற கழகம் எவருக்கும் எப்போதும் அடிபணிவதில்லை என்பதை உணர்த்தி, நம் கழகத்தின் நிலைப்பாட்டை உரக்க வெளிப்படுத்த கூடல் நகரில் கூடுவோம். ” என்று தெரிவித்திருந்தார்.