பீகார் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம் – முதலமைச்சர் ஸ்டாலின்..

CM MK Stalin On Bihar Election: பீகார் தேர்தல் 2025 அனைவருக்கும் ஒரு பாடம். முதுபெரும் தலைவர் நிதீஷ் குமார் அவர்களின் தீர்க்கமான வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அவருக்கு என் நல்வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,

பீகார் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம் - முதலமைச்சர் ஸ்டாலின்..

கோப்பு புகைப்படம்

Published: 

15 Nov 2025 09:04 AM

 IST

சென்னை, நவம்பர் 15, 2025: பீகாரில் நடந்து முடிந்த தேர்தல் என்பது அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பீகார் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 14, 2025 தேதியான நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. காங்கிரஸ் எதிர்பாராத விதமாக ஆரம்பம் முதலே பின்னடைவு சந்தித்து வந்தது. இந்த சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியில் விரைவில் பெரிய பிளவு ஏற்படும் என்றும், மக்கள் காங்கிரஸை முழுமையாக நிராகரித்து விட்டனர்; இனியும் அந்தக் கட்சியின் மீதான அதிருப்தி அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுப் பேசியார்.

மேலும் படிக்க: கடிக்க பாய்ந்ததால் ஆத்திரம்.. தெரு நாயை கட்டையால் அடித்து கொலை செய்த நபர்!

பீகார் சட்டமன்ற தேர்தல் – தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி:

பீகாரில் இருக்கக்கூடிய 243 சட்டமன்றத் தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் எதிர்பாராத விதமாக கடும் பின்னடைவு சந்தித்து, படுதோல்வி அடைந்தது. இந்தத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைதள பதிவில், “காங்கிரஸ் கூட்டணியிடம் நம்பிக்கை வைத்த பீகாரில் உள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் படிக்க: “SIR படிவத்தை பார்த்தாலே தலை சுற்றுகிறது”.. முதல்வர் ஸ்டாலின்!!

பீகாரில் இந்த தேர்தல் முடிவு உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கிறது. தொடக்கத்திலிருந்தே நியாயமற்ற முறையில் நடந்த தேர்தலில், வெற்றி பெற தவறிவிட்டோம். அரசியலமைப்பு, சட்டம் மற்றும் ஜனநாயகத்தைக் பாதுகாப்பதற்காகவே இந்தப் போராட்டம்,” என குறிப்பிட்டார்.

பீகார் தேர்தல் அனைவருக்குமான பாடம் – முதலமைச்சர் ஸ்டாலின்:


பீகார் தேர்தல் முடிவுகள் இந்திய அளவில் பெரும் பேசப் பொருளாக மாறியுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பீகார் தேர்தல் தொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “பீகார் தேர்தல் 2025 அனைவருக்கும் ஒரு பாடம். முதுபெரும் தலைவர் நிதீஷ் குமார் அவர்களின் தீர்க்கமான வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அவருக்கு என் நல்வாழ்த்துகள். இளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் அயராத பிரச்சாரத்திற்கும் நன்றி,” என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் மூடி மறைக்கப்படவில்லை:

“தேர்தல் முடிவுகள் நலன்கள், வளங்கள், சமூக மற்றும் சித்தாந்த கூட்டணிகள், தெளிவான அரசியல் செய்தி மற்றும் கடைசி வாக்குப்பதிவு வரை அர்ப்பணிப்புடன் இருந்த மேலாண்மை ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன. இந்திய கூட்டணியின் தலைவர்கள் செய்தியைப் படித்து, வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள மூலோபாய ரீதியாக திட்டமிடும் திறன் கொண்ட அனுபவமுள்ள அரசியல்வாதிகள்.

இந்த தேர்தலின் முடிவு இந்திய தேர்தல் ஆணையத்தின் தவறான மற்றும் பொறுப்பற்ற செயல்களையும் மூடி மறைக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் நற்பெயர் அதன் மிகக் குறைந்த கட்டத்தில் உள்ளது. இந்த நாட்டின் குடிமக்கள் வலுவான மற்றும் பாரபட்சமற்ற தேர்தல் ஆணையத்திற்கு தகுதியானவர்கள். அதன் செயல்பாடுகள் வெற்றி பெறாதவர்களிடமும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.