Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சில்லென மாறும் சென்னை.. மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ..

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சில்லென மாறும் சென்னை.. மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Jun 2025 16:34 PM

வானிலை நிலவரம், ஜூன் 22,2025: கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஆனது பதிவாகியுள்ளது. மதுரை, ஈரோடு, பாளையங்கோட்டை மற்றும் பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது, கடந்த சில தினங்களாக சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில் ஜூன் 21 2025 தேதியான நேற்று வெப்பநிலை என்பது கணிசமாக குறைந்து பதிவாகியுள்ளது.

மழைக்கு வாய்ப்புள்ளதா – வானிலை நிலவரம் என்ன?

மேலும் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களை இடி மின்னலுடன் கூடிய மழை இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலை அடுத்த ஏழு நாட்களுக்கு அதாவது வருகின்ற ஜூன் 28 2025 வரை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் அதிகபட்ச வெப்ப நிலை என்பது இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வெப்பநிலையின் தாக்கத்தால் ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை தொடரும் – பிரதீப் ஜான்:


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது மாலை நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிற மாவட்டங்களில் மழை குறைந்த நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் மேக கூட்டம் நகரும் காரணத்தால் காற்றுடன் கூடிய மழை பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் அதிகபட்ச வெப்பநிலை இருந்தாலும் அதனை தணிக்கும் வகையில் இந்த மழை இருப்பதாக தெரிவிக்கின்றனர்.