அதிகனமழை எதிரொலி.. நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
School Leave: நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
பள்ளி விடுமுறை: நீலகிரி மாவட்டத்திற்கு நாளை (ஜூன் 14, 2025)ரெட் அலர்ட் (Red Alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரியில் இருக்கக்கூடிய அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கல்வி அலுவலர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை(South West Monsoon) இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கிய நிலையில் நீலகிரி, கோவை, டெல்டா மாவட்டங்கள், தென்காசி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பதிவாகி வருகிறது. தென்மேற்கு பருவ மழை என்பது பொதுவாக ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த தென்மேற்கு பருவ மழை தமிழகத்தின் அநேக பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களான கேரளா கர்நாடகா மகாராஷ்டிரா என அநேக மாநிலங்களுக்கு அதிகப்படியான மழை கொடுக்கும். தென்மேற்கு பருவமழை தொடங்கி இருக்கக்கூடிய நிலையில் தமிழ்நாடு கேரளா மகாராஷ்டிரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பதிவாகி வருகிறது.
நீலகிரிக்கு ரெட் அலர்ட்:
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 13, 2025
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மாவட்டம் நெற்குன்றத்தில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மணலி புதுநகர பகுதியில் 14 சென்டிமீட்டர் மழையும், கொரட்டூரில் 11 செண்டிமீட்டர் மச்ழசியும், அரக்கோணத்தில் 10 சென்டிமீட்டர் மழை, ஊத்துக்கோட்டை வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் ஒன்பது சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஜூன் 14 2025 அன்று நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கன முதல் அதி கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவை திருநெல்வேலி தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
நாளை (ஜூன் 14, 2025) நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நீலகிரியில் இருக்கக்கூடிய அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறி தனியார் பள்ளிகள் வகுப்பு நடத்தினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.