தேங்கி கிடந்த மழைநீரில் மின்கசிவு… பள்ளி மாணவர் துடிதுடித்து பலி.. சென்னையில் அதிர்ச்சி
Chennai Teen Electrocuted To Death : சென்னையில் திருவொற்றியூர் பகுதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்த மாணவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார். பூமியில் அடியில் பதிக்கப்பட்டிருந்த மின்சார கேபிளில் இருந்து தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து மாணவர் உயிரிழந்துள்ளார். மாணவர் உயிரிழந்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதிரிப்படம்
சென்னை, ஜூலை 03 : சென்னை திருவொற்றியூரில் டியூஷன் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது மின்சாரம் தாக்கி 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளது (Chennai Teen Electrocuted To Death) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் தேங்கி இருந்த மழைநீரில் கால் வைத்தபோது மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்துள்ளார். சென்னையில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், 2025 ஜூலை 3ஆம் தேதியான நேற்று இரவு சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அப்போது, சாலையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி இருக்கிறது. இந்த நிலையில், திருவொற்றியூரில் தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலி
அதாவது, சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் அல்தாப். அவரது மகன் நவ்பில் (17). மாணவர் நவ்பில் மாலையில் டியூசனுக்கு சென்றிருக்கிறார். பின்பு, டியூசன் முடிந்து இரவு வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, சாலையில் மழைநீர் தேங்கி இருக்கிறது.
அந்த மழைநீர் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த நீரை மிதித்த மாணவன் மீது மின்சாரம் பாய்ந்து விழுந்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே மாணவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறி இருக்கின்றனர்.
மின்சாரத்தை துண்டிக்க பலமுறை போன் செய்து மின்வாரியம் பதிலளிக்கவில்லை என பொதுமக்கள் கூறியுள்ளனர். மேலும், மின் கசிவை சரி செய்வதில் மின்வாரியம் காட்சிய அலட்சியத்தால் தான் மாணவர் உயிரிழந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
மக்கள் போராட்டம்
மேலும், அப்பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து மாணவர் நபிலின் தந்தை அல்தாஃப் உசேன் கூறுகையில், “தனது மகனின் மரணத்திற்கு அரசாங்கமும் மின்சார வாரியமும் தான் காரணம்.
இது ஒரு விபத்து அல்ல. இது முற்றிலும் அலட்சியம் மற்றும் கடமை தவறுதல. மின்சாரத்தை துண்டிக்கக் கோரி நாங்கள் பலமுறை அழைப்பு விடுத்தோம், ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை” என கூறினார்.
சம்பவம் நடந்த சாலை, கான்கிரீட் மேற்பரப்பு அமைப்பதற்காக பத்து நாட்களுக்கு முன்பு தோண்டப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். அந்த பணியினிபோது, நிலத்தடியில் இருக்கும் கேபிள் வயர் சேதம் அடைந்து மின்கசிவு ஏற்பட்டதாகவும், அந்த வழியாக செல்லும் பல நேரங்களில் மின்சார லேசாக தாக்கி வந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.