கிழக்கு நோக்கி தட்சிணாமூர்த்தி.. 108 முறை வலம் வந்தால் வேண்டியது நடக்குமாம்!
பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில், சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறப்புமிக்க தலமாகும். கார்த்திகைப் பெண்களுக்கு அஷ்டமாசித்தி உபதேசித்த கதை இங்கு தொடர்புடையதாகும். கிழக்கு நோக்கி அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தி சிலை, பொற்றாமரை குளம், ஆலமரம் போன்ற சிறப்புகளைக் கொண்டது. திருமணத் தடை, குழந்தை பாக்கியம் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

பொதுவாக இந்து மதத்தில் வழிபடக்கூடிய தெய்வங்கள் அனைத்தும் பல்வேறு அவதாரங்களில் இருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் சிவபெருமானின் மறு உருவமாக அறியப்படும் தட்சிணாமூர்த்தி குரு பகவானின் அம்சமாக அறியப்படுகிறார். கோயில்களில் தெற்கு திசை பார்த்து வீற்றிருக்கும் இவர் தென் திசை கடவுள் எனவும், பரமகுரு எனவும் அழைக்கப்படுகிறார். தட்சிணாமூர்த்திக்கு அனைத்து கோயில்களிலும் ஒரு முக்கியமான இடமுண்டு. அதேசமயம் இவர் அனைத்து ஊர்களிலும் தனியாக கோயில் கொண்டும் அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் அருகே இருக்கும் தட்சிணாமூர்த்தி திருக்கோயில் பற்றி இந்த தொகுப்பில் நாம் காணலாம்.
இந்த கோயிலானது காலை 6:30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலையில் 3:30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். தட்சிணாமூர்த்திக்கு உகந்த நாளான வியாழக்கிழமை மட்டும் அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
கோயில் உருவான வரலாறு
நந்தி தேவர் முதலான நால்வருக்கு இறைவன் சிவகதையை கூறிக் கொண்டிருந்தார். அப்போது கார்த்திகை பெண்கள் ஆறு பேரும் இறைவன் முன் விழுந்து வணங்கினர். மேலும் தங்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசிக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டனர். அதன்படி சிவபெருமான் அஷ்டமாசித்தியை உபதேசிக்க கார்த்திகை பெண்கள் அதனை கவனக்குறைவாக கேட்டனர். இதனால் கோபம் கொண்ட இறைவன் நீங்கள் கற்பாறைகளாக பட்டமங்கை என்னும் தலத்தில் இருப்பீர்கள் என சாபம் அளித்தார். கார்த்திகை பெண்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட சாபத்தை நீக்கும்படி மன்றாடினார். இதனை தொடர்ந்து இறைவன் அவர்களை மன்னித்து அருளினார்.
அதேசமயம் நீங்கள் பட்டமங்கை தளத்தில் ஆயிரமாண்டுகள் பாறைகளாய் கிடப்பீர்கள். மதுரையில் இருந்து குரு வடிவில் நான் வந்து உங்களுக்கு காட்சி கொடுத்து சாப விமோசனம் அளிப்பேன் என இறைவன் கூறினார். அந்த தலைமை பட்டமங்கலமாக அழைக்கப்பட்டு வருகிறது.
கோயிலின் சிறப்புகள்
இந்த கோயிலானது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை போன்று பொற்றாமரை குளமும், ஆலமரத்தை தல விருட்சமாகவும் கொண்டிருக்கிறது கோயிலின் வெளியே இருக்கும் ஆலமரத்தடியில் தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது. அதில் புன்னகை தவழும் சிவந்த முகத்துடன், பிறைமதி மற்றும் கொன்றை ஆகியவற்றோடு வலது மேற்கையில் அக்னியும், வலது கீழ் கையில் ஞான முத்திரையும், இடது மேல் கையில் நாகமும், வலது கீழ் கையை தொடையில் வைத்தும் தட்சிணாமூர்த்தி இங்கு காட்சி கொடுக்கிறார்.
பொதுவாக தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி தான் காட்சி கொடுப்பார் ஆனால் இந்த கோயிலில் கிழக்கு நோக்கி காட்சி கொடுப்பது இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் என்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும். 64 திருவிளையாடல்கள் நடத்திய சிவபெருமான் அதில் 33 வது திருவிளையாடலை இந்த தலத்தில் தான் நடத்தியதாக சொல்லப்படுகிறது.
அஷ்டமாசித்தியை கார்த்திகை பெண்களுக்கு உபதேசிக்க சிபாரிசு செய்த உமையாளும் இறைவனின் கோபத்திற்குள்ளானார். அவர் காளி கோலத்தில் நாவல் மரத்தடியில் நவயடிகாளியாக இங்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோயிலில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தின் பின்புறம் கிழக்கு நோக்கிய திசையில் ஐந்து தலை கொண்ட முருகன் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
இந்த கோயிலில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியையும் அதன் பின்புறம் அமைந்துள்ள ஆலமரத்தையும் சரியாக 108 சுற்றுகள் சுற்றி வந்தால் நாம் நினைத்தது அனைத்தும் நடைபெறும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாகும். மேலும் குடும்ப வாழ்க்கை ,தொழில், குழந்தை பாக்கியம், திருமண தடை போன்ற பல பிரச்சனைகளுக்கும் பொதுமக்கள் இங்கு வந்து அங்க பிரதட்சணம் செய்து வழிபடுகின்றனர். வாய்ப்பு கிடைத்தால் இதுதான் ஒரு முறை சென்று பாருங்கள்.
(இந்த கோயில் பற்றி இணையத்தில் பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)