முதியோர் இல்லத்தில் பகீர் சம்பவம்.. கொடுமைப்படுத்தப்பட வயதானவர்கள்!
நொய்டாவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் நடந்த கொடுமையான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கூட்டு சோதனையில் 40-க்கும் மேற்பட்ட முதியவர்கள் மோசமான நிலையில் மீட்கப்பட்டனர். மனிதாபிமானமின்றி நடத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. அந்த இல்லம் சீல் வைக்கப்பட்டு, முதியவர்கள் அரசு இல்லங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதியோர் இல்லத்தில் கொடுமை
நொய்டா, ஜூன் 27: உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள முதியோர் இல்லத்தில் நடைபெற்ற சம்பவங்கள் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாடு முழுவதும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக குழந்தைகள் காப்பகம், குடும்பத்தினரால் கைவிடப்படும் முதியவர்களை பாதுகாத்திட முதியோர் இல்லங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த இல்லங்களுக்கு தேவைப்படும் பணம், பொருளுதவி எல்லாம் நன்கொடை மூலம் வசூலிக்கப்பட்டும், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மாதம் பராமரிப்பு செலவு என்ற பெயரின் மூலம் கிடைக்கப்பெறுகின்றது. இப்படியான நிலையில் நொய்டாவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் திடீரென சோதனை நடத்தப்பட்டது. அங்கு இருக்கும் முதியவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கிருந்த முதியவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதை அதிகாரிகள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மோசமான நிலையில் முதியவர்கள்
இந்த சோதனையின் போது, வயதான பெண் ஒருவர் துணியால் கட்டப்பட்டு ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்ததை கண்டனர். அதே நேரத்தில் ஆண்கள் இருட்டான அறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக வயதான பெண்கள் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையின்போது அந்த முதியோர் இல்லத்தில் தன்னை ஒரு செவிலியர் என்று கூறிக்கொண்ட ஒரு பெண் பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அப்பெண் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் என்பது தெரியவந்தது.
அந்த இல்லத்தில் இருந்த முதியவர்களில் பெரும்பாலானோர் சிறுநீர் மற்றும் மலம் கலந்த அழுக்கடைந்த ஆடைகளில் காணப்பட்டனர். அந்த இடம் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதுதொடர்பான விசாரணையில் முதியவர்களை பராமரிக்கிறோம் என்ற பெயரில் அழைத்து வந்து அவர்களை தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை அந்த முதியோர் இல்ல நிர்வாகிகள் ஏற்படுத்தியது தெரிய வந்தது.
கூட்டுக்குழு சோதனையில் வெளிவந்த உண்மை
இந்த முதியோர் இல்லமானது நொய்டாவில் உள்ள செக்டார் 55ல் அமைந்துள்ளது. இந்த நிகழ்வில் மாநில மகளிர் ஆணையம், நொய்டா காவல்துறை, சமூக நலத்துறை மற்றும் மாவட்ட நன்னடத்தை அலுவலகம் ஆகியவை இணைந்து கூட்டுச் சோதனையை மேற்கொண்டன. இதில் அந்த இல்லத்தில் இருந்து சுமார் 40 முதியவர்கள் மீட்கப்பட்டனர். மேலும் ஒரு வயதான பெண்மணி கட்டப்பட்டு ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முதியோர் இல்லத்தில் வயதானவர்களை அனுமதிக்க நன்கொடையாக மட்டும் ரூ.2.5 லட்சம் பெறப்படுகிறது. அதேசமயம் தங்குமிடம் மற்றும் உணவுக்காக மாதத்திற்கு ரூ.6,000 வசூலிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், முதியவர்களின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டபோது, எல்லாம் தங்களுக்கு தெரிந்து நடக்கிறது என்பதைப் போல பலரும் மழுப்பலாக பதிலளித்துள்ளனர். இந்த முதியோர் இல்லத்தைப் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து முதியோர் மக்களும் தற்போது அரசாங்கத்தால் நடத்தப்படும் முதியோர் இல்லங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.