Corona : கொரோனாவுக்கு ஒரே நாளில் 4 பேர் பலி.. 5,755 பேருக்கு சிகிச்சை!

Corona Cases Rapidly Increasing in India | உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. அதன் காரணமாக இந்தியாவிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகியுள்ள நிலையில், 5,755 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Corona : கொரோனாவுக்கு ஒரே நாளில் 4 பேர் பலி.. 5,755 பேருக்கு சிகிச்சை!

மாதிரி புகைப்படம்

Published: 

09 Jun 2025 07:19 AM

டெல்லி, ஜூன் 09 : உலக அளவில் கொரோனா பரவல் (Covid 19 Spread) மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் நேற்று (ஜூன் 08, 2025) மட்டும் 4 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5,755 ஆக உள்ளது. இந்த நிலையில், கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் பாதிப்பின் தீவிரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலக அளவில் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கிய கொரோனா தொற்று பரவல்

சீனாவின் ஊகான் மாகாணத்தில் தான் முதல் முதலாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று உலகம் முழுவதும் பருவ தொடங்கியது. இந்த கொரோனா தொற்று மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிர் இழந்தனர். இந்த நிலையில், பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், உயிர் இழப்புகளை தடுக்கவும் அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. அதன்படி, பல மாதங்கள் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

பின்னர் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதன் காரணமாக, மெல்ல மெல்ல பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. இந்த நிலையில், தற்போது உலக அளவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ஒரே நாளில் 4 பேர் கொரோனாவுக்கு பலி

இந்தியாவை பொருத்தவரை கொரோனா தொற்று பாதிப்பு மிக தீவிரமாக உள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் கேரளாவில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், ஜூன் 07, 2025 முதல் ஜுன் 08, 2025 காலை 8 மணி வரை நாடு முழுவதும் புதியதாக 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 5,755 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரே நாளில் 4 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.