உடற்பயிற்சிக்கு பிறகு இரத்த பரிசோதனை செய்யலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
Health Check Insight : மக்களிடையே உடல் நலன் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக மக்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறாமலேயே தன்னிச்சையாக இரத்த பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் உடற்பயிற்சிக்கு பிறகு இரத்த பரிசோதனை செய்யலாமா என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கொரோனா (Corona) காலகட்டத்துக்கு பிறகு மக்களிடையே உடல் நலன் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. எந்தவொரு நோயையும் சரியான நேரத்தில் கண்டறிய வழக்கமான இரத்த பரிசோதனைகளை (Blood Test) மேற்கொள்வது அவசியம். சில நேரங்களில் மருத்துவர்களின் ஆலோசனையை பெறாமலேயே தன்னிச்சையாக இரத்த பரிசோதனைகள் செய்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இரத்த பரிசோதனை செய்வதற்கு என நோயை பொறுத்து அதற்கென சரியான நேரங்கள் இருக்கிறது. குறிப்பாக சர்க்கரை நோய் (Diabetic) பரிசோதனை செய்ய காலை சாப்பிட்டதற்கு முன் சாப்பிட்ட பின் என இரு முறை பரிசோதனை செய்வார்கள். இந்த நிலையில் உடற்பயிற்சி செய்த உடனேயே இரத்த பரிசோதனை செய்வது சரியா என யோசித்திருக்கிறீர்களா? இது உங்கள் பரிசோதனை அறிக்கையைப் பாதிக்குமா? உடற்பயிற்சிக்குப் பிறகு எவ்வளவு நேரம் சோதனைகள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு உடனடியாக இரத்தப் பரிசோதனை செய்து கொண்டால், உங்கள் அறிக்கையில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று டாக்டர் சமீர் தெரிவிக்கிறார். உடற்பயிற்சியின் போது உடலில் ஹார்மோன், வளர்சிதை மாற்றம் மற்றும் இதய செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது இரத்த குளுக்கோஸ், லாக்டேட் அளவுகள், ஹார்மோன்கள் (கார்டிசோல் போன்றவை) ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும். இது உங்கள் இரத்த பரிசோதனையைப் பாதிக்கலாம்.
உடற்பயிற்சி செய்தவுடன் இரத்த பரிசோதனை செய்யலாமா?
டாக்டர் சமீர் கருத்துப்படி, உடற்பயிற்சி செய்த உடனேயே இந்தப் பரிசோதனைகளைச் செய்யக்கூடாது.
- உடற்பயிற்சியின் போது உடல் அதிக குளுக்கோஸைப் பயன்படுத்துகிறது, இது தற்காலிகமாக இரத்த சர்க்கரையைக் குறைக்கும்.
- கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு லாக்டேட் அளவுகள் அதிகரிக்கின்றன, இது பரிசோதனை முடிவுகளில் குழப்பத்தை ஏற்படுத்தும்.
- கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு கல்லீரல் நொதிகள் (SGOT, SGPT) ஆகியவை அதிகரிக்கக்கூடும், இது கல்லீரல் செயலிழப்புக்கான சந்தேகத்தை ஏற்படுத்தும்.
எப்போது இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்?
இரத்தப் பரிசோதனை செய்வதற்கு குறைந்தது 8-12 மணி நேரத்திற்கு முன்பு எந்த வகையான கடினமான வேலைகளையும் செய்யக்கூடாது என்று டாக்டர் சமீர் அறிவுறுத்துகிறார். இதன் பொருள், பரிசோதனை நாளில், உடற்பயிற்சி செய்யாமல் முடிந்த வரை அதிகாலையிலேயே ஆய்வகத்திற்குச் செல்லுங்கள். இது உங்கள் அறிக்கையை மிகவும் துல்லியமாகவும் மற்றும் சரியான சிகிச்சையை வழங்க மருத்துவருக்கு உதவும்.
சர்க்கரை நோய் போன்ற பரிசோதனைகளின் போது சாப்பிடாமல் இருப்பது நல்லது. மேலும், லேசான உடல் செயல்பாடுகளைக் கூட செய்யக்கூடாது. வேண்டுமானால் நீங்கள் தண்ணீர் குடிக்கலாம், ஆனால் தேநீர், காபி அல்லது பழச்சாறு ஆகியவற்றை கண்டிப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்கள் பரிசோதனைக்கு முன் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதயம், நீரிழிவு அல்லது தைராய்டு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும். உடற்பயிற்சிக்குப் பிறகு தவறுதலாக இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டிருந்தால், அறிக்கையை பார்க்கும்போது நிச்சயமாக இந்தத் தகவலை மருத்துவரிடம் தெரிவிக்கவும்.