Pragathi Mahavadi: கேவலமாக திட்டிய 2 பேர்.. சினிமாவே வேண்டாம் என போன பிரகதி!
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக திகழும் பிரகதி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தான் ஹீரோயினாக நடித்த சமயத்தில் நடந்த மோசமான அனுபவம் பற்றி பேசியுள்ளார். அதனால் சில காலம் சினிமாவில் நடிப்பதை நிறுத்திய அவர் மீண்டும் அம்மா, அக்கா போன்ற துணை கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார்.

தமிழ் சினிமாவில் தனக்கு நேர்ந்த மோசமான சம்பவத்தை நடிகை பிரகதி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 1994 ஆம் ஆண்டு கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரகதி. தொடர்ந்து பெரிய மருது, பாண்டியனின் ராஜ்ஜியத்தில், சும்மா இருங்க மச்சான், வாழ்க ஜனநாயகன், புதல்வன் ஆகிய சில படங்களில் மட்டுமே தமிழில் ஹீரோயினாக நடித்தார். இதன்பின்னர் 2003 ஆம் ஆண்டில் ரவிமோகன் நடித்த ஜெயம் படத்தில் சதாவின் அம்மா கேரக்டரில் நடித்து ரீ-எண்ட்ரீ கொடுத்தார். அதன்பின்னர் சிலம்பாட்டம், இனிமே இப்படித்தான், எத்தன், தாரை தப்பட்டை, யாகாவாராயினும் நா காக்க, கெத்து, பகீரா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களில் பிரகதி நடித்திருக்கிறார்.
பிரகதியை திட்டிய இயக்குநர், நடிகர்
View this post on Instagram
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பிரகதியிடம், “வீட்ல விசேஷங்க படத்தில் கவர்ச்சி கலந்த ஒரு கேரக்டர் பண்ணிருப்பீங்க..அந்த நேரத்துல அதைப் பற்றி என்ன நினைச்சீங்க?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு எதுவும் அப்போது தவறாக தெரியவில்லை. ஒரு கேரக்டர் என்ன தேவை என்பதை செய்ய வேண்டும். பிடிக்கவில்லை என்றால் செய்யக்கூடாது. எனக்கு என்ன சௌகரியமாக இருக்கிறதோ அதை செய்வேன். அசௌகரியமாக நினைத்தால் முடியாது என சொல்லி விடுவேன்.




ஒரு தமிழ் படத்தில் முதலில் இதுபோன்ற ஒரு கேரக்டரை முதலில் ஏற்றுக் கொண்டு பின்னால் மாட்டேன் என சொல்லி விட்டேன். அந்த படத்தில் மழையில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. முதல் நாள் ஷூட்டிங்கில் கொடுத்த ஆடையை அணிந்து நடித்து விட்டேன். இரண்டாம் நாள் ஷூட்டிங்கில் இன்னொரு சேலை கொடுத்தார்கள். அது எனக்கு சௌகரியமாக இல்லை. ரொம்ப ஒரு மாதிரியாக இருந்தது. ஒரு கேரக்டருக்கான லிமிட் என்பது வைத்துக் கொள்ளவில்லை.
சினிமாவே வேண்டாம் என முடிவு
ஆனால் ஷூட்டிங்கில் ஸ்பாட்டில் இதை என்னால் செய்ய முடியும் என்பதை பொறுத்து தான் இருக்கிறது. சொல்லபோனால் அந்த படத்திற்கு பின்னால் சினிமாவில் நடிப்பதையே நான் நிறுத்தி விட்டேன். அந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் ஆகிய 2 பேரும் பேசிய வார்த்தைகள் ரொம்ப மோசமானவையாக இருந்தது. ஒரு ஆள் மேல இருந்த கோபத்தில் சினிமாவே வேண்டாம் என கூறி விட்டேன். திட்டியிருந்தால் கூட பெரிதாக தெரிந்திருக்காது. ஷூட்டிங் குழு, பொதுமக்கள் என அனைவர் முன்னிலையிலும் அவமரியாதையாக பேசினார்கள். ஆனால் அந்த படத்தை முடித்து கொடுத்து விட்டேன். அப்போது எனக்கு 18 வயது தான் ஆகியிருந்தது. நானும் என்னை தற்காத்துக் கொள்ள அவர்களை பதிலுக்கு பேசினேன்” என கூறியிருக்கிறார். ரசிகர்கள் பலரும் யார் அந்த நபர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.