தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, தொலைபேசி வாயிலாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயுடன் பேசி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் முக்கியமாக பார்க்கும்போது, இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் திராவிடக் கட்சிகள் பின்னுக்கு தள்ளப்பட்டு, தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்து வருகிறது. சுமார் 108 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். திமுக இரண்டாவது இடத்திலும், அதிமுக மூன்றாவது இடத்திலும் உள்ளது.
முக்கியமாக, திமுகவின் பல அமைச்சர்கள் — குறிப்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஆர். காந்தி, ஆர். ராஜேந்திரன், கீதா ஜீவன், பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, டி.ஆர்.பி. ராஜா, அன்பில் மகேஷ், எஸ்.எம். நாசர், சாமிநாதன், அன்பரசன், மா. சுப்பிரமணியன், முத்துசாமி, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட பலரும் தோல்வியடைந்துள்ளனர். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைப்பதற்கு அடுத்ததாக யாரின் ஆதரவை பெறும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.