மே 4, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மே 4ஆம் தேதியான இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், தமிழக வெற்றிக்கழகம் 109 இடங்களில் முன்னிலை வகித்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் திமுக 73 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது இடத்தில் அதிமுக 52 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக்கழகம் 109 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த சூழலில், தமிழக அரசியல் களத்தில் அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும்? தொங்கு சட்டமன்றம் அமையுமா? அல்லது தமிழக வெற்றிக்கழகத்தை நோக்கி மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் செல்வார்களா? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும் படிக்க: மு.க.ஸ்டாலின் முதல் சீமான் வரை.. முதல் அமைச்சர் வேட்பாளர்கள் வெற்றி நிலவரம் என்ன!
கட்சி மாறும் காங்கிரஸ்?
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்து கிரிஷ் சோடங்கர் பதிலளித்துள்ளார். பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு கிடைத்ததால்தான் தமிழக வெற்றிக்கழகம் அதிக அளவில் முன்னிலை பெற்றுள்ளது. தமிழகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், முதலில் காங்கிரஸ் கட்சி தரப்பில் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சி மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைத்தது. இதுகுறித்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறுகையில், தேர்தலின் போது பல கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கமான ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.
தவெக உடன் கூட்டணி அமைக்குமா காங்கிரஸ்?
காங்கிரஸை பொருத்தவரையில், தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என ஒரு தரப்பினர் விருப்பம் தெரிவித்திருந்தனர். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது முதல் பொதுக்கூட்டத்தில், கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கீடு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்ற யூகங்கள் வெளியானது. ஆனால் தேர்தல் நெருங்கியபோது, எந்தக் கட்சியும் இறுதி கட்டத்தில் அந்த கூட்டணியில் இணைந்ததில்லை.
இதற்கிடையில், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 37 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன் பின்னர் கூட்டணி ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டது. மேலும், சில மூத்த தலைவர்களின் அழுத்தத்தினால் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைத்ததாகவும், ராகுல் காந்திக்கு தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்க விருப்பம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
கிரிஷ் சோடங்கர் சொன்ன சூசக விஷயம்:
தற்போது, தமிழக வெற்றிக்கழகம் 109 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்துடன் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து கிரிஷ் சோடங்கர், “பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு காரணமாக தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் சேர அழைப்பு வந்தால் காங்கிரஸ் ஆதரவளிக்குமா என்ற கேள்விக்கும் இதேபோன்ற பதிலை அவர் வழங்கியுள்ளார். எனவே, வரவிருக்கும் நாட்களில் தமிழக அரசியல் களம் மேலும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைத்தால், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.