Magalir Urimai Thogai : தொடங்கியது மகளிர் உரிமைத் தொகை முகாம்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?
Camps for Applying Kalaignar Magalir Urimai Thogai | தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான மகளிர் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனர்களை இணைக்கும் வகையில், அரசு சிறப்பு முகாம்களை தொடங்கியுள்ளது.

சென்னை, மே 30 : தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை (Kalaignar Magalir Urimai Thogai) திராவிட முன்னேற்ற கழக (DMK – Dravida Munnetra Kazhagam) அரசு முழு வீச்சில் நடத்தி வருகிறது. தற்போதைய நிலவரத்தின் படி இந்த திட்டத்தில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மகளிர் பயனடைந்து வருகின்றனர். இருப்பினும் சிலருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் உள்ளது. இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத மகளிர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று (மே 29, 2025) முதல் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நடைபெற்று வருகிறது.
1 கோடியே 14 லட்சம் மகளிர் பயன்பெறும் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
2021 சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு சேகரிப்பின் போது தமிழகத்தில் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது. இந்த தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்ற நிலையில், ஆட்சி அமைத்தது. திமுக அரசு ஆட்சி அமைத்ததும் எப்போது மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்படும் என பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளான அன்று மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
மே 29, 2025 முதல் மகளிர் உரிமைத் தொகை முகாம்கள்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் #பொன்னேரி மற்றும் #கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்களுக்கான முகாம் 29.05.2025 அன்று முதல் நடைபெறுகிறது.இம்முகாமில் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் முறையாக விண்ணப்பித்து தங்களுக்கான உரிமைத் தொகையை விரைவில் பெற்றுக்கொள்ளலாம். pic.twitter.com/Um1OmIxjnM
— ஆர் கே சரண்ராஜ் குமார் (@RKSaranrajKumar) May 28, 2025
தமிழகத்தில் 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், தற்போது வரை 1 கோடியே 14 லட்சம் குடும்ப தலைவிகள் இந்த திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தில் மீதமுள்ள குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் வகையில் 2025, ஜூன் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, நேற்று (மே 29, 2025) முதல் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மகளிர் உரிமைத் தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
இதுவரை மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறை ரேஷன் கடையில் வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது. மாறாக அரசு சார்பில் நடத்தப்படும் முகாம்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மகளிரின் மனுக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியுள்ள மகளிருக்கு இரண்டு மாதங்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்க வழிவகை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.