Viral Video : கங்காருவுடன் விமானத்தில் ஏற முயன்ற பெண்?.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Woman Arguing to Let Kangaroo Inside the Flight | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பெண் ஒருவர் தனது செல்லப்பிராணியான கங்காருவை விமானத்தில் ஏற்ற அனுமதி கோரி விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது.

விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு குறிப்பிட்ட சில விதிகள் உள்ளன. அந்த விதிகளை பின்பற்றினால் மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்படும். குறிப்பாக விமானத்தில் குறிப்பிட்ட அளவு எடை கொண்ட பொருட்களை மட்டுமே எடுத்து செல்ல முடியும். அதேபோல சில பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படும். அந்த வகையில், விமானத்தில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இந்த நிலையில், பெண் ஒருவர் விமானத்தில் கங்காருவை அழைத்துச் செல்ல விமான நிலைய அதிகாரிகளுடன் சண்டையிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விமானத்தில் கங்காருவை அழைத்துச் செல்ல அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் பெண்
சமூக ஊடகங்களில் உதவியால் இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான மற்றும் வியக்கத்தக்க வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பெண் ஒருவர் தனது செல்லப்பிராணியான கங்காருவை விமானத்தில் அழைத்துச் செல்வதற்காக விமான நிலைய அதிகாரிகளுடன் சண்டையிடும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கும் கங்காருவின் செயலை பார்த்து பலரும் வியந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வைரல் வீடியோவில் அந்த கங்காரு என்ன செய்தது, இந்த வீடியோ உண்மையானதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
போர்டிங் பாஸை கையில் வைத்துக்கொண்டு அமைதியா நின்றிருந்த கங்காரு
Emotional support Kangaroo tries to hop on a plane. Wasn’t onboard on first but upon seeing I say let that Joey fly. 🦘🇦🇺pic.twitter.com/u7k7KxibQS
— Andrew Paino (@AndrewPaino) May 28, 2025
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் பெண் ஒருவர் கங்காருவுடன் விமானத்தில் செல்வதற்காக காத்திருக்கிறார். கங்காருவுடன் பயணம் செய்ய அவருக்கு அனுமதி மறுக்கப்படவே அவர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், அந்த கங்காரு தனது கையில் போர்டிங் பாஸை வைத்துக்கொண்டு அமைதியாக நின்றுக்கொண்டு இருக்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ உண்மையானதா?
இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோ அச்சு அசல் உண்மையானது போல தோன்றினாலும், அது உண்மை வீடியோ அல்ல. இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட வீடியோ ஆகும். இந்த வீடியோ முதன் முதலில் itsme_urstruly என்ற எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அங்கிருந்து தான் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது. இந்த பக்கத்தில் இதேபோன்ற செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவாக்கப்பட்ட பல வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.