அணு ஆயுதப் போரை நிறுத்தினோம் – இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து டிரம்ப்

Trump Talks India-Pak : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை தடுக்க தாம் முக்கிய பங்கு வகித்ததாக கூறியுள்ளார். மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான மோதலை நாங்கள் முடிவுக்கு கொண்டுவர வணிகமே முக்கிய காரணம் என்றும் அவர் பேசினார்.

அணு ஆயுதப் போரை நிறுத்தினோம் - இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து டிரம்ப்

டொனால்ட் டிரம்ப்

Published: 

12 May 2025 22:11 PM

இந்தியா (India) மற்றும் பாகிஸ்தான் (Pakistan) இடையே அணு ஆயுதப் போர் நிகழவிருந்த ஆபத்தான சூழ்நிலையை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஓர் பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். மேலும், எனது தலைமையிலான  நிர்வாகம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே உடனடி போர் நிறுத்தத்துக்கு காரணமாக அமைந்தது.  இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஆபத்தான மோதலை முடிவுக்கு கொண்டுவந்தோம். இது மிகப் பெரிய வெற்றி என்று அவர் பேசியிருந்தார்.

போர் நிறுத்தத்துக்கு வணிகம் காரணமா?

இரு நாடுகளுக்கு இடையேயான மோதலை நாங்கள் முடிவுக்கு கொண்டுவர வணிகமே முக்கிய காரணம். அமெரிக்கா இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் பெரிய அளவில் வணிகம் செய்யப்போகிறோம் என்ற நம்பிக்கையை அவர்கள் கொண்டிருந்தனர். அதனால் தான் இரு நாடுகளும் அமைதிக்கு கொண்டு வர சம்மதித்தனர். நான் இரண்டு நாடுகளிடம், ‘நீங்கள் சண்டையை நிறுத்தினால் தான் நாங்கள் வியாபாரம் செய்வோம்; இல்லை என்றால் எதுவும் கிடையாது என்று சொன்னேன். உடனடியாக சம்மதித்தனர்” என்றார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் இருதரப்பினரும் உறுதியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டனர் என டிரம்ப் பாராட்டினார். அவர்களது திறமையான செயல்பாடுகள் மற்றும் போர் நிறுத்தத்துக்கான போக்கு ஆகியவை இந்த சிக்கலை சமாளிக்க உதவின என்று குறிப்பிட்டார்.

டிரம்ப்பின் பேச்சை மறுக்கும் இந்தியா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பேச்சில் ‘போர் நிறுத்தம்’ (Ceasefire) என்ற சொல்லை பயன்படுத்தினாலும், இந்தியா அதனை ஏற்க மறுத்துள்ளது. அது ஒரு அதிகாரப்பூர்வ போர் நிறுத்தம் அல்ல என்றும், பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி தொடர்கிறது என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.. இது ஆபரேசன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்ட இந்திய ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே தொடர்கிறது.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழ்நிலையில், டிரம்ப் அளித்த இந்தப் பேட்டி சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது.  இருப்பினும், இந்தியா ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று தெளிவாக அறிவித்துள்ளது. எனவே,  இது அமைதிக்கான தொடக்கம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில் நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, ஒவ்வொரு முறை போர் ஏற்படும் போது பாகிஸ்தானை நாம் தோற்கடித்துள்ளோம். இந்திய இராணுவம் பாகிஸ்தானுடனான போர்களில் திறமையாக செயல்பட்டிருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தானுடனான தற்போதைய தாக்குதலின்போது நமது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தானின் முயற்சியைத் தடுத்திருக்கின்றன. இதனை உலகமும் பார்த்து வருகிறது. நாம் அனைவரும் அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கும் எதிராக ஒற்றுமையாக இருக்க வேண்டும், இதுவே நமது மிகப்பெரிய பலம். என்று குறிப்பிட்டுள்ளார்.