கொட்டும் மழை.. சென்னைக்கு எப்படி? வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்!
tamil nadu weather update : 2025 மே 13ஆம் தேதி அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனால், வரும் நாட்களில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, மே 09 : தமிழகத்தில் 4 நாட்களுக்கு ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் (Tamil Nadu Weather) தெரிவித்துள்ளது. சென்னை பொறுத்தவரை, நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 2025 மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. வெப்பநிலை 100 டிகிரியை கடந்தும் பதிவாகி வருகிறது. 2025 மே 4ஆம் தேதி கத்திரி வெயிலும் தொடங்கியது. இதற்கிடையில், அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.
தமிழகத்தில் கொட்டும் மழை
இந்த மே மாதம் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். ஆனால், மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பநிலை குறைவாகவே உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மழை பிச்சு எடுக்கிறது.
இந்த நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, 2025 மே 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 மே 9ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் எப்படி?
அதோடு, வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் 2025 மே 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிமாக இருக்கக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என கூறியுள்ளது. இன்னும் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. அதாவது, 2025 மே 13ஆம் தேதி அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், வரும் நாட்களில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.