முதுமலையில் முதல்வர் ஸ்டாலின்.. யானைகளுக்கு கரும்பு.. பாகன்களுக்கு ரூ.5 கோடியில் புதிய வீடு!
CM Stalin Ooty Visit : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பாகங்களுக்கு ரூ.5 கோடி மதிப்பில் 44 புதிய வீடுகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதோடு, அங்கிருக்கு யானைகளுக்கு கரும்புகளை வழங்கினார்.

ஊட்டி, மே 14 : நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு முதல்வர் ஸ்டாலின் (CM Stalin Ooty Visit) பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்கு 2025 மே 15ஆம் தேதியான நாளை மலர்க்கண்காட்சியை தொடங்க வைக்க நீலகிரிக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். 2025 மே 12ஆம் தேதி நீலகிரிக்கு பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து இருக்கிறார். இந்த நிலையில், அவரது பயணத்தின் இரண்டாம் நாளான 2025 மே 13ஆம் தேதியான நேற்று முதல்வர் ஸ்டாலின் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்று பார்வையிட்டார். கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது, அவர் காரில் இருந்து இறங்கி பொதுமக்களுடன் போட்டோ எடுத்து கொண்டார். அதேபோல, மசினக்குடி பகுதியிலும் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதுமலையில் முதல்வர் ஸ்டாலின்
அதைத் தொடர்ந்து தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் மாலை 5 மணியளவில் வந்தடைந்தார். அங்கு அவருக்கு பழங்குடி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பேசினார். இதைத் தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியம் பாகங்களுக்கு ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 44 வீடுகளை திறந்து வைத்தார்.
மேலும், வனத்துறைக்கு வாகனங்களையும் வழங்கினார். மேலும், யானைகள் முகாமில் ஒரு மரக்கன்றையும் நட்டார். ஆஸ்கார் விருது பெற்ற ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற பழங்குடி தம்பதியான பொம்மன் மற்றும் பெல்லியுடன் அவர் பேசினார். அதைத் தொடர்ந்து, யானை பாகங்களுடனும் பேசினார். மேலும், முகாமில் உள்ள யானைகளுக்கு கரும்பு மற்றும் பழங்களை வழங்கினார்.
பாகன்களுக்கு ரூ.5 கோடியில் புதிய வீடு
நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் ரூ. 5.06 கோடி செலவில் 44 அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள மாவூத் கிராமத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்து, தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை ரூ. 5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு… pic.twitter.com/TkytnBcB9D
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 13, 2025
முதல்வர் ஸ்டாலின் வருகை காரணமாக மாலையில் யானைகள் முகாமுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “ஏற்கனவே நன்கு பராமரிக்கப்பட்டு வரும் முதுமலை புலிகள் காப்பகத்தை மேலும் மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்” என்றார்.
மேலும், தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை ரூ. 5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் சேவையை தொடங்கி வைத்து, வன சரகர்களின் பயன்பாட்டிற்காக ரூ. 2.93 கோடி மதிப்பிலான 32 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதற்கிடையில், 2025 மே 14ஆம் தேதியான இன்று காலை உதகையில் நடைபயணம் மேற்கொண்ட ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “ஆட்சிக்கு வந்தால் பொள்ளாச்சி வழக்கில் உண்மை குற்றவாளிகள் தண்டடிக்கப்படுவர் என வாக்குறுதியாக கூறியிருந்தேன். உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்ற வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். கோடநாடு வழக்கிலும் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்” என்றார்.