மனித தலையுடன் சாமியாட்டம்.. நெல்லை கோயிலில் நடந்த சம்பவம்.. போலீஸ் வழக்குப்பதிவு!
Tirunveli Temple Festival : திருநெல்வேலி மாவட்டத்தில் உப்பூர் ஊர்க்காடு சுடலை மாடசாமி கோயில் கொடை விழாவில் மனித தலையுடன் நடமாடிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சாமக்கொடை எனும் அழைக்கப்படும் சடங்கின்போது, சடுகாட்டிற்கு சென்று எரிந்த நிலையில் கிடந்த உடல்களை தோண்டி எடுத்து நடனமாடியது தெரியவந்துள்ளது

திருநெல்வேலி, ஜூன் 10 : திருநெல்வேலி மாவட்டத்தில் வீரவநல்லூர் பகுதியில் கோயில் திருவிழாவில் ஏரிந்த நிலையில் இருந்த மனித தலையுடன் நடனமாடிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வெள்ளாங்குழி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித தலை எப்படி வந்தது, என்ன செய்தீர்கள் என்ற கோணத்தில் 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உப்பூர் கிராமத்தில் சுடலை மாடசாமி கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் 2025 மே 6ஆம் தேதி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சாமக்கொடை வேட்டை என்று அழைக்கப்படும் சடங்கும் நடந்தது.
கோயிலில் மனித தலையுடன் நடனம்
சாமக்கொடை என்ற சடங்கின்போது, சுடுகாட்டிற்கு சென்ற எரிந்த உடல்களை எடுத்து சாமியாடுவது சுடலை மாடசாமி கோயில் திருவிழாவில் நடப்பது வழக்கம். அந்த வகையில், 2025 மே 6ஆம் தேதி நடந்த சாமக்கொடை நிகழ்வின்போது, நள்ளிரவு 12 மணியளவில் சுடுகாட்டிற்கு சென்று சாமியாடிகள் எரிந்த மனித தலை, கை, கால்கள் உள்ளிட்ட உடல் பாகங்களை எடுத்து வந்து கோயிலில் சாடியாடி உள்ளனர்.
எரிந்த தலை மற்றும் உடல் பாகங்களுடன் சாமியார்கள் நடமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், சாமியார்கள் சிலர் கையில் அரிவாள்களை ஏந்திக் கொண்டும், கையில் மனித தலைகள், எலும்புகளை கையில் வைத்தபடி நடனமாடுவதை காட்டுகிறது. இதனை அங்கிரருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருப்பதையும் வீடியோவில் தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
5 பேர் மீது பாய்ந்தது வழக்கு
இதுகுறித்து வெள்ளங்குளி கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரின் வீரவநல்லூர் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் சாமியாடி பூசாரிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாரதிய நியாய சன்ஹிதா 2023பிரிவு 270 (தொல்லை), பிஎன்எஸ் 272 (தொற்றுநோயைப் பரப்பும் செயல்), பிஎன்எஸ் 301 (புதைக்கப்பட்ட இடங்களில் அத்துமீறி நுழைதல்) மற்றும் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற நடைமுறைகள் மதச் சடங்குகளின் ஒரு பகுதியாகக் கூறப்பட்டாலும், அவை சட்டவிரோதமானவை என்று போலீசார் கூறினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ” இந்த சாமியார்கள் மனித உடல்களை தோண்டி எடுத்து கை, கால் போன்ற பாகங்களை சடங்குகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இது குற்றம். எனவே, நாங்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம்” என்றார்.
இது போன்ற நடப்பது முதல்முறையல்ல. தென் மாவட்டங்களில் பெரும்பாலான கோயில்களில் மனித உடல்களுடன் திருவிழாக்களில் நடமாடி வருகின்றனர். 2021ஆம் ஆண்டு கல்லூரணியில் உள்ள சுடலை மாடசாமி கோயில் திருவிழாவின் போது பாதி எரிந்த மனித உடல் பாகங்களை சாமியார் ஒருவர் உட்கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, பாவூர்சத்திரம் பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.