சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு.. இன்று வெளியாகிறது தண்டனை விவரம்!
Sathankulam Father and Son Murder Case | சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் மத்திய அரசு கூறியுள்ளது.

கொலை செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்
மதுரை, ஏப்ரம் 06 : சாத்தான்குளம் (Sathankulam) தந்தை – மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளா 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று (ஏப்ரல் 06, 2026) அறிவிக்கப்பட உள்ளது. இன்று காலை 10.30 மணி அளவில் குற்றவாளிகள் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், அதனை தொடர்ந்து தண்டனை விவரம் அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட தந்தை – மகன்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் 2020 ஆம் ஆண்டு ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் கடுமையாக தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் 9 போலீசார் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : வில்லிவாக்கம் தொகுதியில் விஜய் நாளை பரப்புரை – காவல்துறை அனுமதி
தண்டனை குறித்த நிலைப்பாட்டை அறிவிக்க கூறிய நீதிமன்றம்
மார்ச் 23, 2026 அன்று இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார். அவர்களின் தண்டனை தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இந்த நிலையில், ஏப்ரல் 01, 2026 இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தனது அறிக்கையை இ மெயில் மூலம் தாக்கல் செய்தது.
இதையும் படிங்க : விஜய்யின் மனதில் பாஜக இருக்கிறது.. அதனால் எங்கள் வேட்பாளரின் பெயரை கூறினார் – குஷ்பு பதில்
விவரங்களை பதிவு செய்துக்கொண்ட நீதிபதி, குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் ஏப்ரல் 06, 2026 அன்று அறிவிக்கப்படும் என உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவின்படி, இன்று காலை 10.30 மணி அளவில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர். அதனை தொடர்ந்து அவர்களுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் எந்த பாரபட்சமும் பார்க்க கூடாது என்றும், குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள தனது அறிக்கையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.