பிப்ரவரி 21,2026: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான 234 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்துகிறார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். திருச்சியில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான மாநில மாநாட்டில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கக்கூடிய சூழலில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் சீமான்?
இந்த முறையும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், திருச்சியில் இன்று நடைபெறும் மாநாட்டில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்த உள்ளார் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இதில் முக்கியமாக, சீமான் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவர் தனது சொந்த மாவட்டமான காரைக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தணித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி:
தமிழக வெற்றி கழகத்தை நடிகர் விஜய் தொடங்கிய போது, நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், “அவர்களின் கொள்கை வேறு, நாம் தமிழர் கொள்கை வேறு; எனவே கூட்டணி சாத்தியமில்லை” என ஒருங்கிணைப்பாளர் சீமான் தெளிவாக தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல மாதங்கள் கழித்து, இந்த முறையும் தேர்தலை தனித்துப் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்தார்.
நாம் தமிழர் கட்சி தொடங்கியதிலிருந்து இதுவரை சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்சி 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தேர்தல்களை சந்தித்து வருகிறது.
படிப்படியாக நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி உயர்ந்து வருகிறது.
-
2016 சட்டமன்றத் தேர்தல் – 1.0% வாக்குகள்
-
2019 நாடாளுமன்றத் தேர்தல் – 3.9% வாக்குகள்
-
2021 சட்டமன்றத் தேர்தல் – 6.58% வாக்குகள்
-
2024 நாடாளுமன்றத் தேர்தல் – 8.2% வாக்குகள்
234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்:
இதனால், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி 10% ஐத் தாண்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் தொகுதிகளில் அவருடைய தனிப்பட்ட வாக்கு வங்கி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் 24% வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், திருச்சி நகரில் உள்ள ஆலம்பட்டி புதூரில் இன்று நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாடு நடைபெறுகிறது. கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.
மேலும், 50% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாம் தமிழர் கட்சியின் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் மரபாக பார்க்கப்படுகிறது.
