அதிகரிக்கும் வெப்பநிலையால் அசௌகரியம் ஏற்படும்.. எச்சரிக்கும் வானிலை..
Tamil Nadu Weather Forecast: தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மழை இருந்தாலும், அதிகபட்ச வெப்பநிலை என்பது 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம், ஜூன் 28, 2025: தமிழகத்தில் கோவை நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, கோவை மாவட்டம் உபாசி உள்ளிட்ட இடங்களில் தலா நான்கு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, கோவை மாவட்டம் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 11 சென்டிமீட்டருக்கு அதிகமான மழை பதிவாகி வந்த நிலையில் தற்போது மழையின் தீவிரம் என்பது கணிசமாக குறைந்துள்ளது. கோவை நீலகிரி தென்காசி தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தாலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
அதிகரிக்கும் வெப்பநிலை:
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை என்பது இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து காணப்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரையில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பநிலை பதிவானது. சென்னை பொருத்தவரையில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 38 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரில் ஒரு சில பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெப்பநிலையால் அசௌகரியம் ஏற்படும் என எச்சரிக்கை:
7 DAYS FORECAST AND WARNINGShttps://t.co/eRlUBZmTu8 pic.twitter.com/m4yAwwA4Kc
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 28, 2025
இது ஒரு பக்கம் இருக்க மேற்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக, ஜூன் 28 2025 தேதியான இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜூன் 30 2025 தேதியான நாளை ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை மட்டுமே பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் வெப்பநிலையின் தாக்கம் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.