Air India : தரையிறங்கும் போது திடீரென 3,500 அடி உயரத்தில் பறந்த விமானம்.. நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!
Air India Flight Suddenly Flies at 3,500 Feet | சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக 200 அடி உயரத்தில் பறந்த ஏர் இந்தியா விமானம் திடீரென உயர்ந்து சுமார் 3,500 உயரத்தில் பறந்ததால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த விவகாரம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை, மே 29 : சிங்கப்பூரில் (Singapore) இருந்து சென்னை (Chennai) வந்த ஏர் இந்தியா (Air India) விமானம் தரையிறங்க கடும் சிரமத்தை சந்தித்த நிலையில், அதில் பயணித்த பயணிகள் நூல் இழையில் உயிர் தப்பும் அனுபவத்தை பெற்றுள்ளனர். விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாக தாழ்வாகவும், உயர்வாகவும் பறந்த நிலையில், விமான பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த நிலையில், விமானம் தரையிறங்க சந்தித்த சிக்கல் என்ன, இந்த போராட்டத்திற்கு பிறகு விமானம் எப்படி தரையிறக்கப்பட்டதுன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
200 அடி உயரத்தில் தாழ்வாக பறந்த விமானம்
நேற்று (மே 28, 2025) சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்தில் தரையிரங்குவதற்காக தாழ்வாக பறந்துள்ளது. 200 அடி உயரத்தில் தாழ்வாக பறந்த விமானம் திடீரென, 3,500 அடி உயரம் வரை சென்று வானில் வட்டமடிக்க தொடங்கியுள்ளது. பின்னர் சுமார் 20 நிமிடங்கள் வரை வானில் 3,500 அடியில் வட்டமடித்த பிறகு அந்த விமானம் தரையிறங்கியுள்ளது. இதன் காரணமாக விமானத்தில் பயணித்த பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
தரையிறங்கும் போது திடீரென 3,500 அடி உயரத்தில் பறந்த விமானம் – காரணம் என்ன?
இந்த விவகாரம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, விமானம் தரையிறங்க முயற்சி செய்த போது தரைக்காற்றின் வேகம் திடீரென அதிகரித்துள்ளது. அப்போது விமானம் 200 அடி உயரத்தில் தாழ்வாக பறந்துக்கொண்டு இருந்துள்ளது. தரைக்காற்று விமானத்தை தரையிறக்க சாதகமாக இல்லாததை உணர்ந்த விமானி, தரையிறங்குவதற்காக தாழ்வாக பயணம் செய்த விமானத்தை மீண்டும் வானில் உயரமாக பறக்க செய்துள்ளார்.
இதன் காரணமாக சில நிமிடங்கள் விமானம் வாலில் உயரத்தில் பறந்துவிட்டு மீண்டும் தரையிறங்கியுள்ளது. இதனால் விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை. விமானம் தரையிறங்கும்போது சாதகமான சூழல் இல்லை என்றால் வானில் உயரே பறந்து மீண்டும் தரையிறங்குவது இயல்பான ஒன்றுதான் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானம் மீண்டும் உயரே பறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.