Rajenthra Bhalaji: எடப்பாடி பழனிசாமி உத்தரவு போதும்.. என் தலைமையில் போர் செய்ய தயார்! ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேச்சு..!
Rajenthra Bhalaji Controversial Statement: விருதுநகரில் அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அவர், எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால், 1000 அதிமுக இளைஞர்கள் இந்தியாவுக்காக போராடத் தயார் என்று கூறினார். போர்க்களப் பயிற்சி வழங்கப்படும் என்றும், திமுக ஆட்சியின் தோல்விகளை விமர்சித்தும் பேசினார். நீட் ரத்து, மதுக்கடை மூடல் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாததையும் கண்டித்தார்.

விருதுநகர், மே 7: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் (Edappadi k. Palaniswami) 71வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி (Rajenthra Bhalaji) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால், விருதுநகரில் இருந்து அதிமுகவை சேர்ந்த 1000 இளைஞர்கள் யுத்த களத்தில் துப்பாக்கி ஏந்தி இந்தியாவிற்காக போராட தயாராக இருக்கிறோம்.” என்று பேசினார். இது தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
போர்க்களத்தில் போரிட பயிற்சி:
தொடர்ந்து பேசிய அவர், “ இந்தியாவிற்கு போர்க்களத்தில் போரிட இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடுவதற்கான 10 நாட்கள் இடைப்பட்ட பயிற்சி வழங்கப்படும். அதன்பிறகு எனது தலைமையில் போர்க்களத்தில் களமிறங்குவோம். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய இரணுவதும் நடத்தும் போரில் அதிமுகவின் பங்கு நிச்சயமாக இருக்கும். அதிமுகவினர் தேசத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்பதற்கு அடையாளமாக யுத்த களத்திற்கு, போர் வீரர்கள் தேவை என்று சொன்னால் விருதுநகரில் இருந்து இளைஞர்களை அழைத்து செல்ல நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.
நீட் குறித்து பேசிய ராஜேந்திர பாலாஜி:
பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய அரசுக்கு உலகமே பாராட்டி வருகிறது. தமிழகத்தில் 4 ஆண்டுகள் நிறைவடைந்து 5ம் ஆண்டியில் அடியெடுத்து வைக்கும், திமுக ஆட்சியில் இதுவரை எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. நீட் ரத்து செய்வதாக கூறி ஆட்சி அமைத்து இதுவரை ரத்து செய்யவில்லை. அதேபோல், தமிழ்நாட்டில் மதுக்கடையை மூடுவோம் என்று சொன்னார்கள் அதையும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் இளம் விதவைகள் அதிகளவில் உள்ளதாக திமுக எம்பி கனிமொழி சொன்னார்கள். ஆனால், ஆட்சி அமைத்த பிறகு மதுக்கடையை மூடாமல் மது விற்பனையில் 50 ஆயிரம் கோடி லாபம் பெறுகிறார்கள். இவர்களது ஆட்சிக்குபின் பருப்பு, அரிசி, செங்கல் விலை என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் சரமாரியாக உயர்ந்துள்ளது.
அதிமுக ஆட்சியின்போது மாதத்திற்கு ரூ.15 ஆயிரம் இருந்தாலே குடும்பத்தை நடத்தலாம் என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால், இப்போது திமுக ஆட்சியில் ரூ. 50 ஆயிரம் இருந்தால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பொய். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக மு.க.ஸ்டாலின் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். ஆனால், அது இனிமேல் நடக்காது. திமுகவிற்கு மக்கள் சம்பட்டியால் அடிப்பார்கள். இனி திமுகவிற்கு இறங்கு முகம், அதிமுகவிற்கு ஏறுமுகம். திமுகவின் ஆட்சியில் முதலமைச்சரை தவிர, மக்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் கஷ்டப்படுகிறார்கள். இதற்கான தக்க பதிலடியை வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.