கோவை கார் குண்டுவெடிப்பு.. மேலும் 4 பேரை கைது செய்த என்.ஐ.ஏ..
Coimbatore Bomb Blast: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 4 பேரை கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு அமைப்பு. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அகமது அலி, ஜவஹர் சாதிக், ராஜா அப்துல்லா மற்றும் ஷேக் தாவூத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கோவை கார் குண்டுவெடிப்பு: தமிழ்நாடு தீவிரவாதம் மற்றும் ஆட்சேர்ப்பு வழக்கில், கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு வழக்கின் ஒரு பகுதியாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளது, இந்த வழக்கில் இதுவரை மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்றது. இந்த சம்பவத்தில் உக்கடம் ஜி எம் சாலையில் சேர்ந்த முபின் என்பவர் உயிரிழந்தார். முதலில் இந்த சம்பவம் கார் சிலிண்டர் வெடித்து சிதறியதாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கார் சிலிண்டர் வெடித்து கார் இரண்டாக உடைந்து அப்பகுதியில் ஆணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. சந்தேகத்தின் பெயரில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டை காவல்துறையினர் சோதனை செய்தனர்.
வழக்கை விசாரிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு:
அப்பொழுது 75 கிலோ வெடிமருந்துகள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தொடர்பான சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளது, இந்த வழக்கில் இதுவரை மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அகமது அலி, ஜவஹர் சாதிக், ராஜா அப்துல்லா மற்றும் ஷேக் தாவூத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நான்கு பேரும், மெட்ராஸ் அரபிக் கல்லூரியின் நிறுவனர் ஜமீல் பாஷாவால் மூலை சலவை செய்யப்பட்டு பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, தமிழ்நாட்டில் அரபு மொழி வகுப்புகளை வழங்குவது என்ற போர்வையில் ஏமாற்றி, இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்வதிலும், அவர்களுக்கு சலாபி-ஜிஹாதி சித்தாந்தத்தை நுட்பமாக புகுத்துவதிலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல்:
தேச விரோத தீவிரவாதம் மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வகுப்பறைகள் மற்றும் சமூக தளத்தைப் பயன்படுத்திய ஜமீல் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளான இர்ஷாத், சையத் அப்துர் ரஹ்மான் மற்றும் முகமது ஹுசைன் ஆகியோரை NIA முன்னதாக கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கிலாபத் சித்தாந்தத்தையும் தியாகத்தையும் ஜிஹாத் மூலம் ஊக்குவித்ததாகவும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அகற்றிய பின்னர் இஸ்லாமிய அரசை நிறுவ வன்முறை மற்றும் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்ததாகவும் NIA விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன.
தேசத்திற்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, RC.No.01/2023/NIA/CHE (TN ISIS தீவிரமயமாக்கல் மற்றும் ஆட்சேர்ப்பு வழக்கு) வழக்கில் NIA தனது விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.