வீட்டில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா? வாஸ்து ரகசியங்களை தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்..!
Simple Vastu Tips: வீட்டில் நல்ல ஆற்றல் நிலைக்க வாஸ்து விதிகளை சரியாக பின்பற்றுவது முக்கியம். வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளை திறந்தவையாக வைத்திருப்பதும், மாலை நேரங்களில் அனைத்து அறைகளிலும் வெளிச்சம் இருக்கச் செய்வதும் நன்மை தரும் என கூறப்படுகிறது. விஷத்தன்மை கொண்ட செடிகள் மற்றும் தேவையற்ற வாஸ்து பொருட்களை வீட்டின் உள்ளே வைப்பதை தவிர்க்க வேண்டும்.

வாஸ்து
வீட்டை அழகுபடுத்தும் நோக்கில் பலர் பழைய பகுதிகளை புதுப்பித்து மீண்டும் கட்ட முயற்சிக்கின்றனர். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை விதிகளை கவனிக்காமல் மாற்றங்கள் செய்தால், வீட்டின் இயல்பான ஆற்றல் ஓட்டம் பாதிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக இரண்டு சுவர்கள் இணையும் முனைப்பகுதிகளை முற்றிலும் உடைத்து மாற்றுவது தவிர்க்கப்பட வேண்டும். அப்படி செய்வதால் வீட்டின் அமைப்பு சமநிலையை இழக்கும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே பழைய கட்டமைப்பை பாதிக்காமல், தேவையான பகுதிகளை மட்டும் புதுப்பிப்பது நல்லதாக கருதப்படுகிறது.
வீட்டில் எப்போதும் வெளிச்சம் நிலைக்க வேண்டும்
வீட்டில் ஒளி நிறைந்த சூழல் இருப்பது மன அமைதிக்கும், நல்ல ஆற்றலுக்கும் அடையாளமாக பார்க்கப்படுகிறது. மாலை நேரத்தில் வீட்டின் அனைத்து அறைகளிலும் மின்விளக்குகள் ஏற்றப்பட வேண்டும் என்பது வாஸ்துவில் முக்கியமான விதியாக உள்ளது. குறிப்பாக பயன்படுத்தப்படும் அறைகள் இருட்டாக இருக்கக் கூடாது. வெளிச்சம் இல்லாத இடங்களில் சோர்வு, மனஅழுத்தம் போன்ற எதிர்மறை உணர்வுகள் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதனால் வீட்டின் ஒவ்வொரு பகுதியும் சுத்தமாகவும், வெளிச்சமுடனும் இருப்பதை உறுதி செய்வது அவசியம்.
மாடிப்படிகளின் திசை அமைப்பும் முக்கியம்
வீட்டின் மாடிப்படிகள் எந்த திசையை நோக்கி தொடங்குகின்றன என்பது கூட வாஸ்துவில் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. குறிப்பாக கிழக்கு அல்லது வடக்கு திசைகளை நோக்கி ஏறும் வகையில் மாடிப்படிகள் அமைக்கக் கூடாது என கூறப்படுகிறது. காரணம், அந்த திசைகள் வீட்டிற்கு நல்ல சக்தி மற்றும் செல்வ வளத்தை கொண்டு வரும் திசைகளாக பார்க்கப்படுகின்றன. எனவே அந்த ஆற்றல் தடையின்றி வீட்டிற்குள் செல்லும்படி கட்டிட அமைப்பை திட்டமிட வேண்டும்.
வீட்டில் வளர்க்கும் செடிகளிலும் கவனம் தேவை
பலர் வீட்டை அழகுபடுத்த பலவிதமான செடிகளை வளர்க்க விரும்புகிறார்கள். ஆனால் வாஸ்து முறையில் விஷ தன்மை கொண்ட செடிகள் மற்றும் பால் வடிக்கும் செடிகளை வீட்டின் உள்ள்பகுதியில் வளர்க்க வேண்டாம் என்று கூறப்படுகிறது. இத்தகைய செடிகள் வீட்டின் அமைதியான சூழலை பாதிக்கும் என நம்பப்படுகிறது. இருப்பினும் வீட்டின் மதில் சுவரை தாண்டிய வெளிப்புற தோட்டங்களில் அவற்றை வளர்க்கலாம். மேலும் வாஸ்து குறைகளை சரி செய்வதாக கூறி வீட்டின் முன்பாக கண்ணாடி கிரிஸ்டல்கள் போன்ற பொருட்களை தொங்கவிடுவதும் தேவையற்றதாக கருதப்படுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை திறந்தவையாக வைத்திருக்க வேண்டும்
வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு திசைகள் மிகவும் முக்கியமானவை என்று வாஸ்து சாஸ்திரம் வலியுறுத்துகிறது. மனித உடலில் வாய் மற்றும் மூக்கு எவ்வாறு உயிர் சுவாசத்திற்கும் உணவிற்கும் முக்கியமோ, அதுபோல் இந்த இரண்டு திசைகளும் வீட்டிற்கு செல்வம், வளம் மற்றும் நல்ல ஆற்றலை கொண்டு வரும் திசைகளாக பார்க்கப்படுகின்றன. எனவே இந்த பகுதிகளில் தேவையற்ற சுவர்கள், அடைப்புகள் அல்லது கனமான பொருட்கள் வைக்காமல் திறந்த வெளி உணர்வுடன் வைத்திருப்பது நல்லது.
தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கட்டுப்பாடு அவசியம்
வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு திசைகள் எதிர்மறை சக்திகள் நுழையும் திசைகளாக வாஸ்துவில் குறிப்பிடப்படுகின்றன. மனித உடலில் கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகளைப் போல இந்த திசைகளும் தேவையற்ற ஆற்றல்களை வெளியேற்றும் தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. அதனால் இந்த பகுதிகளில் அதிக கதவுகள் அல்லது திறப்புகள் இல்லாமல், சற்றே மூடிய அமைப்பில் வைத்திருப்பது நல்லது என கூறப்படுகிறது. இதன் மூலம் வீட்டின் அமைதியும், பாதுகாப்பும் நிலைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.