உள்நாட்டு தேவை உந்து சக்தியாக திகழ்கிறது.. நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்!
Economic Survey Tabled In Parliament | ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
புதுடெல்லி, ஜனவரி 29 : ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் அந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக நிதி அமைச்சகம் சார்பில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதார பிரிவு இந்த அறிக்கையை தயாரிக்கும். இங்த அறிக்கை, கடந்த நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் எப்படி இருந்தது என்பதை விளக்கும்.
தற்போது 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், பிப்ரவரி 1, 2026 அன்று 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், 2025 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜனவரி 29, 2026) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள்
உலகப் பொருளாதார நிலைமைகள் நிச்சயமற்றதாகவும், நிலையற்றதாகவும் உள்ளது. எனினும், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை தொடர்ந்து நேர்மறையாகவே உள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளால் அபாயங்கள் அதிகமாக இருந்தாலும், பல நாடுகளின் பொருளாதாரங்களோடு ஒப்பிடும்போது இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்ப்பதை விட சிறப்பானதாக உள்ளது.
இதையும் படிங்க : எட்டாக்கனியாய் மாறிய தங்கம்.. ஒரே நாளில் ரூ. 9,000 உயர்வு.. 17,000 ரூபாயை நெருங்கும் ஒரு கிராம் தங்கம்..
எனவே 2026 – 2027 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்றும், 2027 – 2028 ஆம் நிதியாண்டில் இது 6.8 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என ஏற்கனவே கணிக்கப்பட்ட நிலையில், சர்வதேச நாணய நிதியம் 7.3 சதவீதமாக இருக்கும் என்றும், உலக வங்கி 7.2 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளன. இது நிதி அமைச்சகத்தின் முந்தைய கணிப்போடு ஒத்துபோகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு தேவை உந்து சக்தியாக திகழ்கிறது
உள்நாட்டு தேவையே இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முதன்மையான உந்துசக்தியாக திகழ்கிறது. குறிப்பாக நகர்புறங்களில் நிலவும் வலுவான நுகர்வோர் தேவை, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் ஆதரவளித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வரி சீரமைப்பு நடவடிக்கைகள் நகர்புற நுகர்வில் முன்னேற்றத்துக்கு பங்களித்துள்ளது என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.