ரூ.25,000 சம்பளம் வாங்குறீங்களா? ஓய்வுகாலத்தில் எவ்வளவு பிஎஃப் பணம் கிடைக்கும்?
EPF growth insights : ஊழியர் மற்றும் நிறுவனத்திடமிருந்தும் மாதம்தோறும் சம்பளத்தின் 12 சதவிகிதம் இபிஎஃப் திட்டத்துக்காக செலுத்தப்படுகிறது. ஒருவர் மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்குகிறார்கள் அவர் ஓய்வு பெறும்போது இபிஎஃப் மூலம் அவருக்கு எவ்வளவு பென்சன் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
EPF என்பது ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதி திட்டமாகும். இது EPFO (Employees’ Provident Fund Organisation) என்ற அரசு அமைப்பால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஊழியர் மற்றும் நிறுவனத்திடமிருந்தும் மாதம்தோறும் சம்பளத்தின் 12 சதவிகிதம் இந்த திட்டத்துக்காக செலுத்தப்படுகிறது. இதில் முக்கியமானது என்னவென்றால் நிறுவனத்தின் 12 சதவிகித பங்களிப்பு முழுவதும் இபிஎஃப்க்கு செலுத்தப்படுவதில்லை. அதில் 8.33 சதவிகிதம் பென்சன் திட்டத்திற்கு (Employees’ Pension Scheme) செல்கிறது. மீதமுள்ள 3.67 சதவிகிதம் தான் இபிஎஃப்க்கு செல்கிறது. இந்த நிலையில் மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்கும் ஒருவர், நீண்ட காலத்தில் சரியாக இபிஎஃப்க்கு செலுத்தி வந்தால் ஓய்வுக்காலத்தில் மிகப்பெரிய தொகையை சேமிக்க முடியும். தொடர் பங்களிப்பு மற்றும் அதற்கு கிடைக்கும் வட்டியினால் இது சாத்தியமாகிறது.
பென்சன் தொகை எப்படி கணக்கிடப்படுகிறது?
ஒருவரின் மாத ஊதியம் ரூ.25,000 எனக்கொள்வோம். அவரது பணத்தில் இருந்து 12 சதவிகித தொகையான ரூ. 3000 பிஎஃப் கணக்கு செல்லும். அதே போல அவர் பணியாற்றும் நிறுவனம் பென்சன் திட்டத்திற்கு 8.33 சதவிகித தொகையான ரூ.2,082.5 என்ற தொகையை செலுத்தும். அதே போல இபிஎஃப் கணக்கிற்கு 3.67 சதவிகித தொகையான ரூ.917.5 என்ற தொகையை செலுத்தும். பென்சன் போக இபிஎஃப் கணக்கிற்கு மாதம் ரூ. 3917.5 செலுத்தப்படும். இபிஎஃப் திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.25 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. இதனால் மாதம் 0.687 சதவிகிதம் வட்டியாக கிடைக்கும்.
EPF தொகை எப்படி வளரும்?
உங்கள் வயது 25 என வைத்துக்கொள்வோம். நீங்கள் 60 வயதில் ஓய்வு பெறுகிறீர்கள் என்றால் உங்களது முதலீட்டு காலம் 35 ஆண்டுகளாகிறது. இபிஎஃப் பங்களிப்பு ரூ.50.4 லட்சம் என்றால் பெறப்படும் வட்டியையும் சேர்த்து மொத்தமாக ரூ.2.84 கோடி கிடைக்கும். இது ஒரு எளிய மதிப்பீடு மட்டுமே. சம்பள உயர்வு, வேலை மாற்றங்கள் மற்றும் வட்டி வீதங்களில் மாற்றம் ஆகியவை உங்கள் இறுதி தொகையில் வேறுபாடு ஏற்படுத்தும்.
இபிஎஃப் என்பது நீண்ட கால சேமிப்புக்கான நம்பகமான திட்டம்.தொடர் பங்களிப்பு மற்றும் வட்டி மூலம் பெரிய தொகையை சேமிக்க முடியும். பணியாளர்கள், இபிஎஃப் தொகையை தவறாமல் செலுத்தி, வருங்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்யலாம். இது நீண்டகால நிதி திட்டமிடலின் முக்கியத்துவத்தையும், ஒழுங்கான சேமிப்பு பழக்கத்தின் பயன்களையும் எடுத்துக்காட்டுகிறது. தொழில்நுட்ப மாற்றங்களோ, வட்டி விகித மாற்றங்களோ இருந்தாலும், உங்கள் எதிர்கால நிதி பாதுகாப்புக்கு EPF ஒரு நம்பகமான ஆதாரமாக இருக்கும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)