பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்.. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் !
Pakistan External Affairs Minister Ishaq Dar About India | இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்திருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நிலவுகிறது. இந்த நிலையில், பிரச்னைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான், மே 17 : ஜம்மு & காஷ்மீர் (Jammu and Kashmir) விவகாரம் உட்பட அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்னைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளத அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் (External Affairs Minister) இஷாக் தர் தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் (India – Pakistan Ceasefire) அமலில் இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்தியான் – பாகிஸ்தான் விவகாரம் குறித்து அவர் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்து வரும் மோதல்
ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் மூலம், பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது. இதற்கு பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியது.
ஆனால் மே 10, 2025 அன்று இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில், அன்று மாலை 5 மணியுடன் தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக இரு நாடுகளும் அறிவித்தன. இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏதேனும் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் விவகாரம் – பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் விருப்பம்
இது குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர், இந்தியாவுடனான போர் நிறுத்தம் மே 18, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து பிரச்னைகளையும் பேசி தீர்க்க அரசியல் செயல்முறை அவசியம். பாகிஸ்தானுக்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் வகையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. சிந்து நதி நீரை தடுக்கும் எந்த ஒரு முயற்சியும் போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.