திமுக கூட்டணியில் இணைகிறதா பாமக? ராமதாஸ் – செல்வப்பெருந்தகை சந்திப்பு.. பின்னணி என்ன?
Selvaperunthagai Meets Ramadoss : தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதன் மூலம், திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இதற்கு செல்வப்பெருந்தகை மறுத்துள்ளார்.

சென்னை, ஜூன் 27 : பாமக நிறுவனர் ராமதாஸ் (Ramadoss) உடன் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை (Selvaperunthagai) சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சந்திப்பு கூட்டணி பேச்சுவார்த்தையாக கூட இருக்கலாம் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி பிரச்னை நாளுக்கு நாள் பெரிதாக வெடித்து வருகிறது. அன்புமணி ஆதாரவாளர்களை ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்குவதும், அவர்கள் மீண்டும் அதே பதவியில் தொடர்வார்கள் எனவும் அன்புமணி கூறி வருகிறார். இதனால், கட்சிக்குள் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே தந்தை மகன் மோதல் என்பது தலைப்பு செய்திகளிலும் இடம் பெற்று வருகிறது.
பாமகவில் உட்கட்சி பிரச்னை
இருவருக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு கொண்ட வர, பாமகவின் மூத்த தலைவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், பிரச்னை நீடித்து வருகிறது. எனது இறுதி மூச்சு இருக்கும் வரை நானே தலைவர் என ராமதாஸ் கூறி வருகிறார். மேலும், திமுகவை அன்புமணி விமர்சித்து வரும் நிலையில், ராமதாஸ் ஸ்டாலினை புகழ்ந்து பேசி இருக்கிறார்.




இப்படியாக, கட்சிக்குள் பிரச்னை நிலவி வரும அதே நேரத்தில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாமக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற கேள்வியும் எழுந்தது. ஏனென்றால், கடந்த லோக்சபா தேர்தலில் அன்புமணி ராமதாஸ் இடையே கூட்டணி குறித்த கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
இந்தசூழலில், தற்போது அதிமுக – பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாமக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்படியான சூழலில், தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்துள்ளார்.
ராமதாஸ் – செல்வப்பெருந்தகை சந்திப்பு
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் திரு.ராமதாஸ் அவர்களை இன்று (27.06.2025) தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் திரு ரூபி மனோகரன் மற்றும்… pic.twitter.com/uEPWffGLUb
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) June 27, 2025
பின்னணி என்ன?
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் செல்வப்பெருந்தகை கூறுகையில், “இந்த சந்திப்பில் கூட்டணி பேச்சுவார்த்தையோ, அரசியல் பேச்சுவார்த்தையே எதுவும் இல்லை. ராமதாஸை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்” என விளக்கம் அளித்தார். பாமகவில் தொடரும் பிரச்னைக்கு திமுக தான் காரணம் என அன்புமணி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த செல்வப் பெருந்தகை, “திமுக கூட்டணி பலமாக இருக்கிறது. நாங்கள் 2026ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சி அமைப்போம். அன்புமணி புரிதலின்றி பேசுகிறார். இந்த சந்திப்பில் எந்த ஒரு அரசியலும் பேசவில்லை” எனவும் கூறினார்.